சினிமாவை விட்டே விலகினாலும் கவலையில்லை... விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்
சென்னை: இந்த சினிமாவை விட்டே விலகினாலும் கவலைப்பட மாட்டேன்... என்னுடைய சுயமரியாதையை இழக்க மாட்டேன் என்று திரைப்பட இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் பொய்... மேல வைக்காத கை... பார்ட் 2 புரோமைப் பார்த்து போலீசை கூப்பிட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் தனது மனுவில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் பயன்படுத்திய 'என்னமா இப்படி பண்றீங்களேமா?' என்ற வார்த்தையை வைத்து விஜய் டி.வி. ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் புண்படுத்தியது. என்னை இழிவுபடுத்தும் வகையில் இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். முதல் முறை என்பதால் விட்டு விட்டேன்.
இப்போது மீண்டும் என்னை புண்படுத்தும் வகையில் அதே நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றனர். தொடர்ந்து என்னை இழிவுபடுத்தும் வகையில் ஒளிபரப்புவதை அனுமதிக்க முடியாது. இதனை எதிர்கொள்ளும் சக்தியும் பொறுமையும் எனக்கு இல்லை. எனவே அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும்'' என தனது புகார் மனுவில் கூறியிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை விஜய் டிவி. வழக்கம் போல நிகழ்ச்சியை ஓளிபரப்பியது.
இந்த நிலையில் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், தனது ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் டிவியை குத்தி குதறி எடுத்துள்ளார். இவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
|
ஏன் கூப்பிட்டீங்க
நான் செய்யும் வேலை பிடிக்காமலா நீங்கள் என்னை உங்களுடைய நிகழ்ச்சிக்கு கூப்பிட்டீர்கள்? இருமுறை என்னை கூப்பிட்டது ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
|
ஆபாசத்தின் உச்சம்
சிரிச்சா போச்சு நிகழ்ச்சி ஆபாசத்தின் உச்சம் என்று பலரும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். சரக்கு தீர்ந்து விட்டதால் அடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாக பலரும் பதிவிட்டுள்ளனர்.
|
நாயாக வாலாட்ட மாட்டேன்
இதனிடையே தூக்கி எறியப்படும் பிஸ்கட்டுக்காக நாய் மாதிரி வாலாட்டிக் கொண்டிருக்க மாட்டேன் என காட்டமாக விஜய் டிவி க்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
|
விலகினாலும் கவலையில்லை
இந்த சினிமாவை விட்டு விலகினாலும் கவலையில்லை. என்னுடைய மரியாதையை ஒருபோதும் இழக்க மாட்டேன். இந்த துறைக்கு வரும்போது நான் எதையும் கொண்டு வரவில்லை. அதேபோல போகும் போது வெறும் கையுடன் போவதற்கும் கவலைப்பட மாட்டேன்.
|
நிறுத்த மாட்டேன்
மக்களே என்னுடைய வேலையை நிறுத்துங்கள் என்று சொல்லும் வரை ஓயமாட்டேன். கடவுளுக்கும் எனது பெற்றோர்களுக்கும் தான் தலை வணங்குவேன். மற்ற யாருக்காகவும் தலை குனிய மாட்டேன்.
|
வெளி வேஷம் போடமாட்டேன்
சாலை மீது படுத்து தூங்குவேன், அல்லது பசியால் இறப்பேனே தவிர சுய மரியாதையை இழக்க மாட்டேன். வெளிவேஷம் போட மாட்டேன். ஒரு பெண்ணாக இருக்க பெருமைப்படுகிறேன். முகமூடி அணிந்து கொண்டு இருக்க மாட்டேன். நான் நானாகவே இருப்பேன் என் வழியில் நடப்பேன் என்று பதிவிட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
|
ராதிகா ஆதரவு
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகையும் சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளருமான நடிகை ராதிகாவும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். ஆனால் விஜய் டிவி தரப்பில் இருந்துதான் எந்த ரியாக்ஷனையும் காணோம்.