எனக்கு கவர்ச்சி அரசியல் பிடிக்கவே பிடிக்காது: சொல்வது ப.சி. மகன் கா.சி.
சென்னை: சினிமாவை மையப்படுத்தி செய்யும் கவர்ச்சி அரசியல் தனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று காங்கிரஸ் சார்பில் சிவகங்கையில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவர் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நான் சிவகங்கை தொகுதியில் நன்கு அறிமுகம் உள்ளவன். அங்கு நான் தேர்தல் பணி தவிர்த்து கட்சி பணியும் ஆற்றியிருக்கிறேன். பல்வேறு கூட்டணி கட்சி தொண்டர்களுடன் பணியாற்றியுள்ளேன். நான் தேர்தலில் போட்டியிடுவது தான் புதிது. எனக்கு தேர்தல் பணி செய்த அனுபவம் நிறைய உள்ளது.
தமிழகத்தில் 3 வகையான அரசியல் உள்ளது. சினிமாவை மையப்படுத்தி செய்யும் கவர்ச்சி அரசியல், தொண்டர்களின் உணர்வைத் தோண்டி செய்யும் உணர்ச்சி அரசியல், வளர்ச்சி அரசியல். இதில் நான் செய்வது வளர்ச்சி அரசியல். சிவகங்கை தொகுதியை அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைய முயற்சிப்பேன். அதற்காக தனியார் நிறுவனங்களை அழைத்து வந்துள்ளேன்.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இங்கு தொழில் நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் பிரச்சாரம் எனக்கு ஒன்றும் புதியது அல்ல. எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.