அத்தையைப் பார்க்க முடியவில்லை, தடுக்கிறார்கள்.. அப்பல்லோவுக்கு வெளியே தவிக்கும் ஜெ. அண்ணன் மகள்
முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானதால் அவரது அண்ணன் மகள் தீபா அப்பல்லோ மருத்துவமனை வாசலில் வந்து கவலையுடன் காத்திருக்கிறார். அவரை மருத்துவமனைக்கு உள்ளே போலீசார் அனுமதிக்கவில்ல
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை இதயவியல் நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணிப்பதாக அப்பல்லோ அறிக்கை வெளியிட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில், 74 நாட்களாக, சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாலை முதலே அப்பல்லோ மருத்துவமனை பரபரப்படைந்தது. அமைச்சர்கள், உயரதிகாரிகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.
முதல்வருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகவும், இதயவியல் நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வருக்கு, 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தப்படலாம், எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுவதும், அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. போலீசார் அனைவரும், பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளனர்.சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்திற்கு, முழு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று இரவே, சென்னையில் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. கடைகளை இன்று திறக்க வேண்டாம்' என, வணிகர் சங்கங்களுக்கு, போலீசார் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க, மாநிலம் முழுவதும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலை குறித்து தகவல் அறிந்த உடன் ஏராளமான அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மருத்துவமனை வாசல் முன்பு குவிந்தனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உடனடியாக அப்பல்லோ மருத்துவமனை வாசலுக்கு வந்தார். ஆனால் அவர் கேட்டிற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, காவல்துறையினர் தன்னை இங்கிருந்து போகுமாறு கூறுவதாக குற்றம் சாட்டினார். யார் சொல்லி தன்னை போலீஸார் துரத்துகிறார்கள் என்றும் தீபா கேள்வி எழுப்பினார். அத்தை ஜெயலலிதாவைப் பார்க்க தனக்கு முழு உரிமை உள்ளதாகவும், ஆனால் தன்னை அனுமதிக்க மறுக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் அப்பல்லோவிற்கு வந்த போதும் அவர் அனுமதிக்கப்படவில்லை, தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.