(இப்போது) நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்கிறார் ப. சிதம்பரம்

இது குறித்து அவர் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில்,
தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் திமுக மற்றும் அதிமுகவால் டெல்லியில் எதையும் சாதிக்க முடியாது. திமுகவும் சரி, அதிமுகவும் சரி இரண்டுமே சண்டைக்கோழிகள். அவர்களின் சண்டை தமிழகத்திற்குள்ளேயே இருப்பது தான் நாட்டிற்கு நல்லது.
130 ஆண்டுகள், 8 தலைமுறை பழமை வாய்ந்தது காங்கிரஸ் கட்சி. கட்சிக்கு குறைகளும், நிறைகளும் உள்ளன. நாங்கள் பல நல்ல திட்டங்களையும் கொண்டு வந்துள்ளோம். சில தவறுகளையும் செய்துள்ளோம். எங்கள் தவறுக்கான தண்டனையை மக்கள் கொடுத்துவிட்டீர்கள். அடித்தாலும், அணைத்தாலும் நாங்கள் உங்கள் வீட்டுப் பிள்ளை.
நடப்பது பஞ்சாயத்து தேர்தல் இல்லை. லோக்சபா தேர்தல். இது அதிமுக, திமுக இடையேயான போட்டி இல்லை. திமுக பாஜக, காங்கிரஸ் மற்றும் மூன்றாவது அணி என்று யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. அப்படி இருக்கையில் டெல்லி ஆட்சியில் எப்படி பங்கேற்க முடியும்?. அவர்கள் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து செயல்படுகிறார்கள்.
ஜெயலலிதாவோ தனது பிரச்சாரத்தின் முதல் 10 நாட்கள் நான் தான் பிரதமர் என்றார். அதன் பிறகோ நாங்கள் மத்திய ஆட்சியில் பங்கேற்போம் என்று கூறி வருகிறார். காங்கிரஸை சாடும் அவர் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா?
ஏற்கனவே பாஜகவுக்கு ஓராண்டு ஆதரவு கொடுத்துவிட்டு பாடாய் படுத்தியது மறந்துவிட்டதா?. டெல்லியில் அதிமுக ஆட்சி கிடையாது. அதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் போட்டி. பாஜக ஆட்சியை பிடித்தால் தலித், முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களின் ஆதரவு இருக்குமா? அவர்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் தான் தொடருமா?. இதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் காங்கிரஸ் ஆட்சி தொடர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications