ஈழத்தில் களமாடிய மாவீரர்களின் புனித மண்ணை பார்க்க ஆசைப்பட்டேன்!- ரஜினி
சென்னை: ஈழத்தில், தங்கள் சுய கவுரவத்துக்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி மடிந்த மாவீரர்கள் சுவாசித்த காற்றைச் சுவாசிக்க விரும்பினேன், என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
வட இலங்கைக்கு வரும் ஏப்ரல் 9 மற்றும் 10 -ம் தேதிகளில் சுற்றுப் பயணம் செய்து போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவிகள் வழங்கவிருந்தார் ரஜினிகாந்த். ஆனால் தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்பால் பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
இது தொடர்பான உணர்ச்சி மிகு அறிக்கையில், "நான் இரண்டு விஷயங்களுக்காக இலங்கை விழாவில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன். காரியம்: அந்த வீடுகளைத் திறந்து வைப்பது.
காரணம்: கால காலமாய் வாழ்ந்த தங்களின் பூமிக்காக, தங்களின் இனத்துக்காக, தங்களது உரிமைக்காக, தங்களின் சுய கவுரவத்துக்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி, மடிந்து, தங்களைத் தாங்களே சுய சமாதியாக்கிக் கொண்டு பூமிக்குள் புதைந்து கிடக்கும் அந்த வீர மண்ணை வணங்கி, அந்த மாவீரர்கள் வாழ்ந்த, நடமாடிய இடங்களைப் பார்த்து, அவர்கள் சுவாசித்த காற்றையும் சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாய் என்னுள் இருந்தது. அதை நிறைவேற்றிக் கொண்டு, பல லட்சக்கணக்கில் கூடவிருக்கும் என்னை வாழவைக்கும் தமிழ் மக்களைப் பார்க்க வேண்டும், மனம் திறந்து பேச வேண்டும் என்று ஆவலாய் இருந்தேன்," என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.