பிரசாரம் மட்டுமே செய்வேன், ஒரு தொகுதியில் கூட போட்டியிட மாட்டேன்.. இளங்கோவன்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் அணி வெற்றி பெற தீவிரப் பிரசாரம் செய்வேன். நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள திமுக தயாராக உள்ளது. இதையடுத்து இதுதொடர்பான ஆலோசனைகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாகியுள்ளது.
சமீபத்தில் தமிழக தலைவர்களை நேரில் அழைத்து ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் மீண்டும் டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.
ராகுலுடன் இளங்கோவன் சந்திப்பு
இன்று சந்திப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டெல்லியில் ராகுல் காந்தி, முகுல்வாஸ்னிக் ஆகியோரை சந்தித்து பேசினேன். இன்னும் ஓரிரு தினங்களில் நல்ல முடிவுகள் அறிவிக்கப்படும்.
விரைவில் ஒருங்கிணைப்புக் குழு
காங்கிரஸ் கூட்டணி, வேட்பாளர் தேர்வு போன்ற பணிகள் பற்றி முடிவு செய்ய கட்சியின் ஒருங்கிணைப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் கூட்டணி குறித்து கட்சி மேலிடமே தீர்மானிக்கும்.
நான் போட்டியிட மாட்டேன்
வரும் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற தீவிரப் பிரசாரம் செய்வேன்.
ஜெ.வுக்கு ஆதரவாக மக்கள் நலக் கூட்டணி
மக்கள் நலக் கூட்டணி என்பது தேர்தல் வரை ஒற்றுமையாக இருந்தாலே பெரிய விஷயம்தான். அவர்கள் உண்மையில் ஜெயலலிதாவுக்கு மறைமுகமாக உதவியே செய்கிறார்கள்.
தமிழிசைக்கு வாழ்த்து
தமிழக பாஜக தலைவராக மீண்டும் தமிழிசை தேர்வு செய்யப்பட்டுள்ளதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார் இளங்கோவன்.
குலாம் நபி வருகை
விரைவில் சென்னைக்கு வரவுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத். இந்த நிலையில் டெல்லி சென்று கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தித் திரும்பியுள்ளார் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தகக்து.