அடுத்த ரெய்டு எனக்கு தானாம்.. வா வந்து பாரு! மோடி, ED-க்கு பயப்படற ஆளா நான்? உதயநிதி ஸ்டாலின் சவால்!
கள்ளக்குறிச்சி: மோடியை பார்த்தும் பயப்பட மாட்டேன், ED-யை பார்த்தும் பயப்பட மாட்டேன். என் வீட்டுக்கு ரெய்டு வா பார்க்கலாம், உங்க பம்மாத்து வேலையெல்லாம் திமுகவிடம் நடக்காது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூடலூரில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்கு ஒரு அலுவலகம் இருக்கும். ஆனால் அதிமுகவிலோ சசிகலா அணி, தீபா அணி, ஓபிஎஸ், ஈபிஎஸ் என மூன்று, நான்கு அலுவலகங்கள் இருக்கின்றன. இதனால் அக்கட்சித் தொண்டர்கள் எங்கு செல்வது என திணறி வருகின்றனர்.
இதேபோல் பாஜகவுக்கும் ஐடி, ஈடி உள்ளிட்ட அணிகள் உண்டு. அவர்கள் தேர்தல் நேரத்தின் போது இறக்கி விடப்படுவார்கள். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நான் குறிப்பிடும் இந்த பாஜக அணியில் உள்ள 95 சதவீதத்தினர், மற்ற கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஊழல் ஒழிப்பு பற்றி பேசி வரும் தமிழ்நாடு ஆளுநர், அதிமுக முன்னாள் அமைச்சர்களான கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி மறுக்கிறார். கடந்த ஆட்சியின் போது, அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சிக்கியவர்களிடம் சோதனை நடத்தவில்லை. மாறாக அவர்களை அடிமைப்படுத்திக் கொண்டனர்.
அதுபோல திமுகவையும் மத்திய பாஜக அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியோ, ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சியோ அல்ல. தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி. உங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், ED (அமலாக்கத்துறை) க்கும் பயப்பட மாட்டோம். உங்கள் பம்மாத்து வேலையெல்லாம் திமுகவிடம் நடக்காது.
சென்ற மாதம் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு. இந்த மாதம் அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு. இரண்டிலும் ஒன்றும் கிடைக்கவில்லை. அடுத்த அமலாக்கத்துறை ரெய்டு எனது வீட்டில் தானாம். பாஜகவினர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வா.. என்னோட அட்ரஸ் வேணும்னாலும் கொடுக்குறேன். உன் ED-க்குலாம் பயப்படுற ஆளா நான்.
நான் யாரு.. நான் கருணாநிதி பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மகன். நான் உங்க மோடியைப் பார்த்தும் பயப்பட மாட்டேன். உங்க ஈடியை பார்த்தும் பயப்பட மாட்டேன். எனக்கு மடியிலும் கனம் இல்லை. வழியிலும் பயம் கிடையாது. நான் சவால் விடுறேன். வா.. எப்போ வேணா வா. ஆனா சொல்லிட்டு வா" என சவால் விட்டுப் பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications