பொது அறிவை வளர்க்க வேண்டும்.. கடுமையாக உழைக்க வேண்டும்.. மாணவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி அட்வைஸ்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முகமது அசரப் அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவர்கள் பேசும்போது படிக்கும் காலத்திலே நாம் பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். கடின உழைப்பும் விடா முயற்சியும், இருந்தால் எதிலும் எளிதாக வெற்றி பெற முடியும்.
ஒழுக்கத்துடன் கூடிய கடின உழைப்பு நாம் உயர்ந்த நிலையை அடைவதற்கு வழி வகுக்கும். படிக்கும்போதே நாம் சிறந்த நிலையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் அந்நிலையை அடைய முழு முயற்சி எடுக்க வேண்டும். சிறந்த முயற்சியே வெற்றியை தரும் என்று கூறினார்.
பைத்துல்மால் மையத்தின் செயலர் ஜமால் ராஜா அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மாணவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வு முறை, அத்தேர்வை எதிர்கொள்ளும் வழிமுறைகள் சம்பந்தம்பான கேள்விகளை கேட்டனர்.
மாணவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் மிகச்சிறப்பாகவும், தெளிவாகவும், விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் கீதா சுந்தரேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் ஜாக்குலின் அவர்கள் செய்திருந்தார்.