தீனதயாளன் வீட்டில் திரும்பிய திசையெல்லாம் கடத்தல் சிலைகள்: வலையில் சிக்கும் விஐபிகள்!
சென்னை: சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டிலிருந்து மட்டும் கடந்த 2 நாட்களில் 187 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. சிலை கடத்தல் வழக்கில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து மேலும் பலர் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக பழங்கால சிலைகளை கடத்தி விற்று வந்த சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தீனதயாளன், கடந்த வாரம் போலீசாரிடம் சரணடைந்தார். பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் வீட்டின் அருகில் உள்ள ஒரு குடோனில் மேலும் பல சிலைகள் இருப்பதாக கூறினார். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டன.
இந்த சிலைகள் கேரளா, மகாராஷ்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று தொல்லியியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் வீட்டில் பொருளாதார குற்றவியல் பிரிவு போலீஸார் இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர். இதில் 159 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் தீன தயாளன் வீட்டிலிருந்து 189 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குடோனில் குவியல்குவியலாக பழங்கால பொருட்கள் சிக்கின.

ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரும், சிலை கடத்தல் மன்னனுமான தீனதயாளனின் ஆழ்வார்பேட்டை பங்களா வீட்டில் முதல் முறையாக அதிரடியாக புகுந்து போலீசார் சோதனை நடத்தினர்.
3 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த சோதனையில் பழங்காலத்தை சேர்ந்த 71 கற்சிலைகளும், 49 ஐம்பொன் சிலைகளும் 75 அரிய வண்ண சோழர்கால ஓவியங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
•போலீஸ் பிடி இறுகியதை தொடர்ந்து கடந்த 3ம் தேதி இரவு தீனதயாளன் போலீசில் சரண் அடைந்தார். உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைக்காமல், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
•கடந்த 10 நாட்களாக சிலை கடத்தல் பற்றியும், வெளிநாட்டு தொடர்புகள் பற்றியும் தீனதயாளனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பொறுமையாக பதில் அளித்த அவர் சிலை கடத்தலின் பின்னணி குறித்த மர்மங்களையும் விளக்கி கூறியிருக்கிறார்.
•சிலை கடத்தல் வழக்கில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து மேலும் பலர் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
•ஆழ்வார்பேட்டை முர்ரேஸ்கேட் சாலையில் உள்ள வீட்டில் மட்டுமே தீனதயாளன் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் அப்பகுதியில் மேலும் 2 இடங்களில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
•முர்ரேஸ் கேட் சாலையில் வேறு ஒரு இடத்தில், தீனதயாளனின் குடோனும் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது தெருவில் அவருக்கு இன்னொரு வீடும் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இது வாடகை வீடாகும்.
•இந்த வீட்டில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். குடோனிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீனதயாளனுக்கு சொந்தமான குடோனில் இருந்து மேலும் 189 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
•55 பழங்கால ஓவியங்கள், 55 பழங்கால கற் பொருட்கள், 2 விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட சிலைகளின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. அவற்றின் மதிப்பு 1000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
•கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு புராதனமான கோவில்களில் இருந்து பழங்கால சிலைகளை திருடி வெளிநாட்டில் விற்பனை செய்துள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
•பெங்களூருவிலும் குடோன் அமைத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் பதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால் அங்கு விரைவில் சோதனை நடத்தப்படவுள்ளது காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
•சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் துருவி துருவி நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. சிலை கடத்தல் விவகாரத்தில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சிலை கடத்தல் பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.
•தோண்ட தோண்ட புதையல் வருவது போல தீனதயாளனின் வீடுகளில் இருந்து அரிய பொக்கிஷங்களாக திகழக்கூடிய சாமி சிலைகள் குவியல் குவியலாக கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்றுடன் சோதனை முடிவுற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால் தொடர் தேடுதல் வேட்டை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
•இதற்கிடையில், தீனதயாளனின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளனர். அதைத் தொடர்ந்து ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். அடுத்த வாரம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications