தமிழகத்தின் முதல்வராக விஜய் வந்தால் மகிழ்ச்சி: நடிகர் எஸ்.ஜே.சூர்யா
தமிழகத்தின் முதல்வராக யார் வர வேண்டும் என்பது குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா பதிலளித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் முதல்வராக நடிகர் விஜய் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று நடிகர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்தார்.
அரசியலுக்கு வருவதாக நடிகர்கள் ரஜினி, கமல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சிலர் தெரிவித்து வருகின்றனர். அரசியலுக்கு வருவதற்கு சில அளவுகோல்களை காரணமாகவும் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து தந்தி டிவி சேனலுக்கு எஸ்.ஜே.சூர்யா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அரசியலுக்கு நடிகர்கள் வரக் கூடாது என்பது சட்டமா?
நடிகர்கள் அரசியலுக்கு வந்ததற்கு ஏராளமான சாட்சிகள் உள்ளன. இது சுதந்திர இந்தியா...இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
என்னை பொருத்தவரை நடிகர் விஜய் முதல்வராகலாம். கொடுக்கப்பட்ட பணிகளை அவர் கமிட்மென்ட்டாகவே செய்கிறார்.
அதையும் தாண்டி அவர் நல்லெண்ணம் கொண்டவர். எனவே அவர் முதல்வரானால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றார் எஸ்.ஜே.சூர்யா.