ஜெ.வுக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்தால் சசிகலாவை சிறையில் தள்ளுவேன்!- டிராபிக் ராமசாமி
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்தால், சசிகலாவை சிறையில் தள்ளுவேன் என்று ஆவேசப்பட்டுள்ளார் சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி.
இரண்டு வாரங்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதான் உடல் நிலை பற்றிய தகவல்கள் குழப்பமாகவும் மேலோட்டாமாகவும் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதற்கேற்ப முதலில் ஜெயலலிதா நலமாக இருக்கிறார், அனைவருடனும் பேசுகிறார், காலைச் சிற்றுண்டியாக திட உணவு சாப்பிட்டார் என்றெல்லாம் முதலில் அறிக்கை வெளியிட்டு வந்தது அப்பல்லோ மருத்துவமனை. இந்த நிலையில் முதல்வரின் உடல் நிலை குறித்த உண்மையான விரிவான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், 'இந்த வழக்கு விளம்பர நோக்கம் கொண்டது," என சாடியது.
இந்த நிலையில் நேற்று விரிவான மருத்துவ அறிக்கையை வெளியிட்டது அப்பல்லோ. வழக்கத்துக்கு மாறாக, இந்த அறிக்கையில், முதல்வருக்கு பல்வேறு நோய்கள் இருப்பதாகக் கூறி, நீண்ட நாட்கள் அவர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ட்ராபிக் ராமசாமி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், அவரது வழக்குக்குப் பிறகே முதல்வரின் உடல் நிலை குறித்த ஓரளவு நம்பக் கூடிய மருத்துவ அறிக்கை வெளியானதாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து ட்ராபிக் ராமசாமி கூறுகையில், "ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியில் சொல்லவிடாமல் தடுப்பது அவரது உயிர்த்தோழி எனப்படும் சசிகலாதான். நான் வழக்குத் தொடர்ந்த பிறகுதான் முதல்வர் உடல் நிலை குறித்து இந்த அளவு தகவல்களையாவது வெளியிட்டுள்ளார்கள்.
ஜெயலலிதா உடல் நலத்துக்குப் பொறுப்பு அப்பல்லோ நிர்வாகமும், சசிகலாவும். ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் ஏதேனும் விபரீதம் நேர்ந்தால், இவர்களைச் சும்மா விடமாட்டேன். சிறையில் தள்ளுவேன்," என்றார் ஆவேசமாக.