ஓட்டுக்கு ரூ.4,000 என்ன, ரூ.40,000 கொடுத்தாலும் நாங்கதான் ஜெயிப்போம்.. ஓபிஎஸ் நம்பிக்கை
ஒரு ஓட்டுக்கு ரூ.40,000 கொடுத்தாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குக்கு ரூ.40,000 அளித்தாலும் எங்களது வேட்பாளர் மதுசூதனன்தான் வெற்றி பெறுவார் என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும்12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுகவின் இரு அணிகளும், திமுகவும் எப்படியாயினும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று கடுமையாக போராடி வருகின்றன.
இந்த நிலையில் யார் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்கும் தேர்தல் என்பதால் இந்த தேர்தலை அதிமுகவின் இரு தரப்பும் எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.

பண பலம்
இதனால் பண பலமும் களத்தில் வலுவாக இறக்கி விடப்பட்டுள்ளது. தினகரன் தரப்பு சரமாரியாக பணத்தை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் குவிகின்றன. மறுபக்கம் திமுக தரப்பும் பணத்துடன் குதித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

25 பேர் சிக்கினர்
பணம் விநியோகத்தில் தினகரன் தரப்பினர் ஈடுபட்டதாக 25 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த ரூ. 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தண்டையார்பேட்டையில் ஓ.பி.எஸ்.
இந்நிலையில் தண்டையார்பேட்டையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வமும், நடிகை லதாவும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓபிஎஸ் பேசுகையில், தினகரன் அணியினர் வாக்குக்கு ரூ.4,000 பணம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

40,000 கொடுத்தாலும் நாங்கதான் ஜெயிப்போம்
ரூ.4,000 என்ன, வாக்குக்கு ரூ.40,000 கொடுத்தாலும் எங்கள் அணியின் வேட்பாளர் மதுசூதனன்தான் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார். இதைக் கேட்டதும் கூட்டத்தினர் மத்தியில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.












Click it and Unblock the Notifications