ஓபிஎஸ் கூவத்தூருக்கு வரவே கூடாது... நவநீத கிருஷ்ணன் பிடிவாதம்
முதல்வர் ஓபிஎஸ் கூவத்தூருக்கு வரவே கூடாது என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூவத்தூர் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால் முதல்வர் ஓபிஎஸ் கூவத்தூருக்கு வரக்கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என தெரிவித்த உச்சநீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரையும் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள சசிகலா அங்குள்ள அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மற்றும் எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவருக்கு ஆதரவானவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய அவர், எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டசபை தலைவராக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, முதல்வர் ஓபிஎஸ் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டசபைக் குழு தலைவராக அறிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் அதனை ஆதரித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தான் சட்டசபை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுவிட்டார். இந்த நேரத்தில் அவர் கூவத்தூர் வரப்போவதாக தகவல்கள் வருகின்றன.
தேவையில்லாத பதட்ட சூழல் ஏற்படும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். ஆகையல் அவர் வர வேண்டாம். ஒ.பி.எஸ். கூவத்தூர் வராமல் இருந்தால் அவருக்கு கோடி புண்ணியம். இவ்வாறு எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications