ரஜினி வாய்ஸ் கொடுத்தல் நல்லாருக்கும்.. தமிழிசை விருப்பம்
சென்னை: ரஜினிகாந்த் தேசிய எண்ணம் கொண்டவர். 2016 சட்டசபைத் தேர்தலில் அவர் பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.
ரஜினி, ரஜினி, ரஜினி என்று எப்போது பார்த்தாலும் அவரைப் போட்டுப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது பாஜக. ஜெயலலிதா தேறி வருவதற்குள்ளாக ரஜினியை நம் பக்கம் இழுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அது தீவிரமாக இருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது ரஜினியை இழுத்து முடிக்கும் வரை ஜெயலலிதா வெளியே வராத அளவுக்கு பாஜக சிரத்தை எடுக்கிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. அப்படித்தான் தெரிகிறது இவர்களும் மற்ற கட்சிகளும் காட்டும அவசரங்களைப் பார்க்கும்போது.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழிசை. அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளித்தார் தமிழிசை. அதில் ரஜினியும் ஒன்று. அந்தப் பேட்டியிலிருந்து...

வாய்ஸ் கொடுத்தால் நல்லது
ரஜினிகாந்த் தேசிய எண்ணம் கொண்டவர். அவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்தால் நன்றாக இருக்கும்.

ஊழலற்ற ஆட்சியை அமைக்க ரஜினி தேவை
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். ஊழலற்ற ஆட்சியை தமிழகத்தில் பா.ஜ.க.வால்தான் அளிக்க முடியும்.

முதல்வர் வேட்பாளரா
ஆனால், முதல்-அமைச்சராக அவர் முன்னிருத்தப்படுவாரா? என்பதை எங்கள் கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும்.

அரசுப் பணிகள் முடக்கம்
தமிழகத்தில் துறை சார்ந்த பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசு நிர்வாகமே முடங்கிக்கிடக்கிறது.

போனஸ் பேச்சையே காணவில்லை
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்வாரிய தொழிலாளர்கள் எல்லாம் போனசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் கூட நடக்கவில்லை. எனவே, உடனே பேச்சு வார்த்தை நடத்தி போனசை அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் வலியுறுத்துகிறோம்.

நோக்கியாவை மூடக் கூடாது
நோக்கியா தொழிற்சாலை முடங்கிக் கிடக்கும் நிலையில், அதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் என்னை இன்று (நேற்று) சந்தித்து மனு கொடுத்துள்ளனர். தொழிற் பயிற்சி கிடைக்கிறது என்ற ஆர்வத்தில் 12-ம் வகுப்பை முடித்தவுடன் மேற்படிப்பைக்கூட தொடராமல் இந்த வேலைக்கு சேர்ந்துள்ளனர். 26 வயதிலேயே வேலையை இழந்துள்ள இவர்களுக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது. உடனடியாக நோக்கியா தொழிற்சாலையை திறக்கவோ, அல்லது பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்யவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications