தினகரனே இந்த அமர்க்களம்னா... ஆர்.கே.நகரில் சின்னம்மா சசிகலா போட்டியிருந்தா சி.எம்.தான்!
தினகரனாலேயே இவ்வளவு வாக்குகள் பெற முடிகிற போது சசிகலா போட்டியிட்டிருந்தால் நிச்சயம் அமோக வாக்குகளுடன் முதல்வர் பதவியையே பெற்றிருப்பார் என்றும் கருத்து உருவாகி உள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கையில் தினகரன் பெற்று வரும் வாக்குகளைப் பார்க்கும் போது சசிகலா மட்டும் போட்டியிருந்தால் நிச்சயம் முதல்வர் நாற்காலியில்தான் அமர்ந்திருப்பார் என்றே எண்ண முடிகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அதிமுகவில் விஸரூபமெடுத்தார். அதிமுகவினர் பெருமளவு சசிகலா பக்கம் அணிதிரண்டனர்.
ஆனால் மக்களோ சசிகலா குடும்பத்தையே வெறுப்பதாகவே ஒரு சூழல் நிலவி வந்தது. அத்துடன் ஓபிஎஸ்-க்கு அப்போது மக்கள் மத்தியில் இமேஜ் இருந்தது.
இதனால் ஓபிஎஸ்ஸின் பதவியை சசிகலா பறித்ததில் கோபம் ஏற்பட்ட நிலை இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் சசிகலா முதல்வர் பதவியில் அமருவதற்கான முஸ்தீபுகளில் மும்முரமானார்.
பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ் உடனே சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பும் சசிகலாவுக்கு எதிராக வந்ததால் அவர் சிறைக்குப் போக நேரிட்டது.
இருப்பினும் சசிகலா குடும்பத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது. ஆனால் ஆர்.கே.நகரில் தினகரன் வாங்கி குவித்து வரும் வாக்குகளோ, மன்னார்குடி குடும்பங்கள் மீதான அத்தனை வெறுப்பும் வங்கக் கடல் அலையில் காணாமலேயே போய்விட்டது.
ஜெயிலுக்குப் போகாமல் சசிகலா மட்டும் இப்போதைய தேர்தலில் போட்டியிருந்தால் சின்னம்மா சி.எம்.தான் போல என்கிற அளவுக்குதான் நிலைமை இருக்கிறது.
தமிழகம் தப்பித்தது காண்!