திருமுருகன் காந்திக்கு ஏதாவது நேர்ந்தால் தமிழக காவல்துறையே பொறுப்பு.. மே 17 இயக்கம்
திருமுருகன் காந்தி கைது சம்பந்தப்பட்டது குறித்து மே 17 இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்திக்கு எது நடந்தாலும் அதற்கு தமிழக காவல்துறைதான் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அந்த இயக்கம் எச்சரித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணைய அமர்வில் பங்கேற்றுவிட்டு ஜெனீவாவிலிருந்து நாடு திரும்பிய 'மே17' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் தேசத் துரோக வழக்கின் கீழ் போலீசார் அவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி சம்பவம்
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அவர் தூத்துக்குடி பயங்கரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அதற்காகவே அவரை கைது செய்துள்ளதாகவும் தெரிகிறது. திருமுருகன் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் மே-17 இயக்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், திருமுருகன் காந்திக்கு எது நடந்தாலும், தமிழக காவல்துறைதான் பொறுப்பு என்று கூறியுள்ளது.
மே 17- இயக்கம் சார்பாக வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
10-க்கும் மேற்பட்ட போலீசார்
"பெங்களூரில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் முருகன் காந்தி தமிழ்நாடு காவல்துறையினால் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளார். தமிழகம் அறிந்த ஒரு மனித உரிமை அரசியல் செயல்பாட்டாளரான திருமுருகன் காந்தியை அழைத்து வருவதற்கு, ஒரு பயங்கரவாதியை அழைத்து வருவதைப் போன்று 10க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான காவல்துறையினர் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
எதற்கு இத்தனை போலீஸ்?
ஒரு மனித உரிமை செயல்பாட்டாளரை அழைத்து வருவதற்கு எதற்கு இத்தனை காவல்துறையினர் வரவேண்டியுள்ளது என்பது எங்களுக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.பெங்களூரிலிருந்து புறப்பட்ட அடுத்த விநாடியிலிருந்து எங்கள் ஒருங்கிணைப்பாளரின் பாதுகாப்பு என்பது தமிழ்நாடு அரசின் கையில் உள்ளது என்பதனை தெரியப்படுத்த விரும்புகிறோம்.
தமிழக போலீசே காரணம்
எங்கள் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்த பாதிப்பு நிகழ்ந்தாலும் அதன் முழுப்பொறுப்பு தமிழ்நாடு அரசினையும், காவல்துறையினையுமே சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து ஜனநாயக சக்திகள், பொதுமக்களிடம் இதனை நாங்கள் வெளிப்படையாக ஜனநாயகப்பூர்வமாக முன்வைக்கிறோம்."
இவ்வாறு மே-17 இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.