எதிர்ப்பு எதிரொலி: அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையை நீக்கியது சென்னை ஐ.ஐ.டி.!!
சென்னை: நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையை நீக்கியுள்ளது சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம்.
சென்னை ஐ.ஐ.டி.யில் பல்வேறு பெயர்களில் மாணவர்கள் வாசகர் வட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அம்பேத்கர்- பெரியார் மாணவர் வாசகர் வட்டத்துக்கு மட்டும் ஐ.ஐ.டி. நிர்வாகம் திடீரென தடை விதித்தது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்துத்துவா கொள்கைகளை விமர்சித்த காரணத்தால்தான் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இத்தடைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
சென்னை ஐ.ஐ.டி.க்கு முன்பாக கடந்த ஒரு வாரகாலம் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் ஐ.ஐ.டி நிர்வாகத்துடன் மாணவர் அமைப்பினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேசுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அம்பேத்கார்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடை நீக்கப்பட்டது.