மீடியாக்களுக்கு மீண்டும் ஒருமுறை இளையராஜா வைத்த 'நறுக்' குட்டு!
சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜா பெயர், சமீப காலமாக தவறான காரணங்களுக்காக செய்திகளில் அவ்வப்போது, அடிபடுகிறது.
சென்னையை கடந்த ஆண்டு டிசம்பரில் பெரு மழை, வெள்ளம் புரட்டிப்போட்ட நேரத்தில், இளையராஜா, படகில் பயணம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி, உதவி செய்தார்.
இதேபோன்ற ஒரு உதவி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இளையராஜாவிடம், டிவி சேனல் நிருபர் ஒருவர், அனிருத் மற்றும் சிம்பு சிக்கியிருந்த பீப் சாங் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அறிவு இருக்கிறதா
கோபமடைந்த இளையராஜா, நிருபரை பார்த்து அறிவு இருக்கிறதா என்ற தொனியில் கோபத்தை கொப்பளித்தார். சம்மந்தம் இல்லாத நிகழ்ச்சியில் அந்த கேள்வி கேட்கப்பட்டதால் இளையராஜா கோபப்பட்டதாக அவரது ரசிகர்கள் கூறினர்.
ரியாக்ஷன்
சக துறையை சேர்ந்தவர் என்ற வகையில், இளையராஜாவிடம், அந்த கேள்வியை கேட்டதில் தவறில்லை, இளையராஜா தேவையில்லாமல் கோபத்தை கொட்டிவிட்டார் என்று இணையங்களில் கருத்து கூறியவர்களும் உண்டு.
விமான நிலைய சோதனை
இந்நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் இளையராஜாவின் பிரசாத பை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட செய்தி, தமிழ் செய்தி சேனல் ஒன்றில் வெளியாகியது. இதையடுத்து பிற மீடியாக்கள் வழியாக காட்டுத் தீ போல அந்த செய்தி பரவியது.
அரசியல் தலைவர்கள் கண்டனம்
வைகோ, ராமதாஸ் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு அந்த செய்தி தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் குறிப்பிட்ட செய்தியை ஒளிபரப்பிய அந்த சேனலுக்கு தனது பேட்டியை கொடுத்துள்ளார் இளையராஜா.
ஐயம் ஹேப்பி..
இந்த பேட்டியில் "நானே அந்த சோதனையை பெரிதாக எடுக்கவில்லை. ஊடகங்கள் ஏன் அதை பெரிதுபடுத்துகின்றன? பாதுகாவலர் அவர் கடமையைதான் செய்தார். இப்படிப்பட்ட பாதுகாவலர்கள் இல்லை என்றால் இந்தியாவே கிடையாது" என்று கூறியுள்ளார்.
ஏன் விரையம்
மேலும், இதுபோன்ற தேவையற்ற விஷயத்தில் நமது நாட்டு மக்கள் தங்கள் கவனத்தையும், சக்தியையும் விரையம் செய்வது தேவையில்லாதது. இது ஒன்றுமே இல்லாத விஷயம் என்றும் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இப்படி பண்றீங்களேம்மா
பீப் சாங் விஷயம், அடுத்து, ஏர்போர்ட் விவகாரம் என இவை இரண்டிலுமே இளையராஜா, தேவையில்லாத விஷயம் என சாடியுள்ளது மீடியாக்களைத்தான். இளையராஜாவின் அடுத்தடுத்த அறச்சீற்றங்களை ஊடகங்கள் புரிந்துகொள்ளுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.