நாமக்கல்லில் தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் விற்பனை - 200 கிலோ பறிமுதல்; ரூ. 5200 அபராதம்!
நாமக்கல்: நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு ரூபாய் 5,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து என அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையில் பொறியாளர் கமலநாதன், சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் நகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அரசு அனுமதித்துள்ள 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்கிறார்களா என சோதனை செய்தனர். இந்த சோதனையில் 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பை, கேரி பேக் மற்றும் பொருட்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த ஆய்வு, மளிகை கடை, பேக்கரி, எசன்ஸ் கடை, வர்த்தக நிறுவனம் என 15 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது 200 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்களுக்கு, 5,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக அத்தொகை வசூல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications