பாலின சோதனை.. 30 ஆயிரம் கொடுத்தால் போதும்.. மொத்தமும் க்ளோஸ்.. குலுங்கிய தருமபுரி.. அதிரடி கைது
தருமபுரி: தருமபுரியில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள கருவின் பாலினம் கண்டறியும் பரிசோதனை மையம் நடத்தி சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த 4 பேரை மருத்துவத் துறையினரின் புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸார் கைது செய்தனர்.
பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு கள்ளிப்பால் ஊற்றி கொன்று விடும் போக்கு மாற வேண்டும் என்றும் பெண் குழந்தைகளை போற்ற வேண்டும். அவர்களை படித்து ஆளாக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் கரு ஆணா பெண்ணா என கண்டறியும் சோதனையின் மூலம் கருவை கண்டறிந்து அது பெண்ணாக இருந்தால் கருவிலேயே அழிக்கும் அவலமும் நடந்தது. இதையடுத்து கருவை கண்டறியும் சோதனைக்கு அரசு தடை விதித்தது.

தருமபுரி மாவட்டம்
எனினும் தருமபுரி மாவட்டங்களில் பெண் குழந்தைகள் என தெரியவந்தால் அவற்றை சிசுவிலேயே கலைக்கும் சம்பவம் அதிகமாக நடந்து வந்தது. இந்த நிலையில் போலியாக மருத்துவம் பார்க்கும் நபர்களையும் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடும் நபர்களையும் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இழைப்போர்
இந்த விவகாரத்தில் தவறு இழைப்போரை அடையாளம் காட்ட மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் சாந்திக்கு மொரப்பூர் அருகே உள்ள வகுத்தானூர் பகுதியில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன.

மருத்துவ ஊழியர்கள்
இதையடுத்து தனது மருத்துவ ஊழியர்களுடன் தனியார் வாகனத்தில் புகார் கூறப்பட்ட இடத்திற்கு டாக்டர் சாந்தி திடீரென ஆய்வு நடத்த சென்றிருந்தார். அப்போது வகுத்தானூர் கிராமத்தில் சாக்கம்மாள் (52) என்பவருடன் இணைந்து கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கவியரசன் (28), அய்யப்பன் (34), மனோஜ்குமார் ஆகியோர் வீட்டிலேயே கருவை கண்டறியும் மையத்தை நடத்தி வந்தது தெரியவந்தது.

4 பேரும் கர்ப்பிணி
அந்த மையத்தின் மூலம் மேற்கொண்ட 4 பேரும் கர்ப்பணி வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பரிசோதனை செய்து வந்துள்ளனர். இந்த 4 பேரும் பெண்ணின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என சோதித்துக் கொண்டிருந்ததை டாக்டர் சாந்தியும் அவருடன் சென்ற அதிகாரிகளும் கண்டறிந்தனர். அதிகாரிகள் வந்ததை பார்த்துவிட்ட சாக்கம்மாள் உள்ளிட்டோர் கதவை மூடிக் கொண்டு திறக்காமல் வாக்குவாதம் செய்துள்ளனர்.

38 ஆயிரம் ரொக்கம்
இதையடுத்து மொரப்பூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் சம்பவ இடம் வந்த போலீஸாரின் உதவியுடன் மருத்துவக் குழுவினர் அந்த மையத்திற்குள் சென்றனர். அப்போது அங்கு சிசுவை கண்டறியும் பரிசோதனைக்கு அவர்கள் பயன்படுத்திய ஸ்கேன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். அந்த இயந்திரத்தின் மதிப்பு ரூ 7 லட்சமாகும். இவர்களிடம் இருந்து 38 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

ஸ்கேனிங் மிஷின்
இதையடுத்து ஸ்கேனிங் பணியை செய்து வந்த அய்யப்பன், கவியரசன், மனோஜ்குமார், சாக்கம்மாள் ஆகியோர் மீது மொரப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். வயிற்றில் இருப்பது ஆணா பெண்ணா என பார்ப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றமாக கருதப்படும் நிலையில் ஒரு குழந்தை ஆணா பெண்ணா என எந்த அனுபவமும் இல்லாமல் பார்த்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யவும் உதவியிருந்தனர்.

ரூ 30 ஆயிரம் வசூல்
கரு ஆணா பெண்ணா என்பதை கண்டறிய இவர்கள் ரூ 25 ஆயிரம் முதல் ரூ 30 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர். இவர்கள் கருவை பெண் என கண்டறிந்துவிட்டால் உடனே கருக்கலைப்பு செய்ய வேறு இடங்களுக்கு எல்லாம் அழைத்து சென்றுள்ளனர். இதற்கு கருக்கலைப்பு செய்தவர்களிடம் இருந்து கமிஷனை பெற்றிருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து கரு பரிசோதனை மையம் வைத்திருந்தவர்களை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications