சென்னையில் புறநகர் ரயிலை மறித்து பயணிகள் போராட்டம்.. போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
சென்னை : புறநகர் ரயில் காலதாமதமாக வந்ததைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட பயணிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
சென்னையின் புறநகர் பகுதி மக்கள் விரைவான போக்குவரத்துக்கு மின்சார ரயில் சேவையையே நம்பியுள்ளனர். நாள்தோறும், அலுவலகம் செல்வோர், வியாபாரம் செய்வோ என பல்லாயிரக்கணக்கானோர் புறநகர்களில் இருந்து சென்னைக்கு வந்து மாலை, இரவில் மீண்டும் புறநகர் திரும்புகின்றனர்.

இதனால் சென்னையில் இருந்து புறநகர் செல்லும் ஒவ்வொரு மின்சார ரயிலிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும்.
இந்த நிலையில், சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில் காலதாமதமாக வந்ததைக் கண்டித்து, பேசின் பிரிட்ஜ் பகுதியில், ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக செல்லும் மற்றும் சென்னை வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பயணிகள் கலைந்து செல்லாததால் அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது.
பயணிகள் கூட்டம் கலைந்த சற்று நேரத்தில் புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.












Click it and Unblock the Notifications