மீண்டும் சர்ச்சையில் மேகி.. நூடுல்சுக்குள் புழு கிடந்ததாக சென்னை பெண்மணி புகார்- வீடியோ
சென்னை: மேகி நூடுல்ஸுக்குள் புழு கிடந்ததாக சென்னையில் பெண் ஒருவர் புகார் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட வேதி பொருள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் நாடு முழுவதும் மேகிக்கு தடைவிதிக்கப்பட்டு, பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மேகி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சென்னை, மதுரவாயல் பகுதியை சேர்ந்த பெண்மணி ஜெனட். இவர் அப்பகுதியிலுள்ள நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் மேகி பாக்கெட் வாங்கினாராம். அதை சமைத்தபோது உள்ளே புழு நெளிந்ததாகவும், மேகி அதிகாரிகளிடம் விஷயத்தை எடுத்து சென்றபோது, கிஃப்ட் வவுச்சர் பெற்றுக்கொண்டு விஷயத்தை அப்படியே விடுமாறு கேட்டுக்கொண்டதாகவும் ஜெனட் கூறுகிறார்.
மேலும், மேகி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி மனு அனுப்பியுள்ளதாகவும், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் ஜெனட் கூறியுள்ளார். அதுகுறித்த வீடியோவை நீங்களே பாருங்கள்.