நிலத்தகராறு.. ஈட்டியால் குத்தி வாலிபர் கொலை.. பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிப்பு
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் நிலத்தகராறில் வாலிபர் ஒருவரின் முகத்தில் மிளகாய் பொய் தூவி ஈட்டியால் குத்தி கொலை செய்துவிட்டு, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சாலை வசதி இல்லாததால் ஒரு நாள் தாமதமாக சென்று உடலை கைப்பற்றியுள்ளனர் போலீசார்.
புதிதாக உதயமாகியுள்ள கள்ளகுறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள மலையரசன்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதியழகன் குடும்பத்திற்கும் அதே ஊரைச்சேர்ந்த மாணிக்கம் குடும்பத்திற்குமிடையே நிலத்தகராறு தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மதியழகனை கொலை செய்ய திட்டமிட்ட மாணிக்கம் குடும்பத்தினர், மதியழகன் நொச்சிமேட்டு பகுதியில் இருந்து மலையரசம்பட்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மாணிக்கம் மற்றும் ஒரு சிலர் மதியழகனை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடி தூவி, ஈட்டி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து கொலையை மறைக்க மதியழகன் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதுகுறித்து ஊர் மக்களுக்கு தகவல் பரவ, கரியாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது.
மலையரசம்பட்டு கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததாலும், வனப்பகுதி என்பதாலும், 6 கி.மீ நடந்து சென்று ஒரு நாள் தாமதமாக மதியழகனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து மதியழகன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம், அவரது மகன் ராமேஷ்வரன், மனைவி பழனியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் காட்டு ராஜா, ரஞ்சிதா, சகாதேவன், தீர்த்தன் ஆகிய 7 பேர் மீது கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.