நெல்லையில் லஞ்சம் கேட்ட அதிகாரி.. கொடவுனில் சிறை வைத்த லாரி டிரைவர்!
மண் அள்ளுவதற்கு உரிய ஆவணங்கள் வைத்திருந்தவரிடம் கனிம வளத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால், லாரி ஓட்டுநரும் அவரது உதவியாளர்களும் அதிகாரியை சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை: லாரியை மறித்து லஞ்சம் கேட்டதால் கனிம வளத்துறை அதிகாரிகளை ஜீப்புடன் சிறை வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை மண் போட்டு சமன் செய்து வருகின்றனர். இதற்காக முன்னீர்பள்ளம் உள்ளிட்ட இடத்தில் இருக்கும் குளத்தில், பூல் பாண்டியன் என்பவர் லாரி மூலம் மண் எடுத்து வரும் பணியைச் செய்கிறார்.

நேற்று மாலை அவர் வழக்கம் போல், மண் அள்ள வரும்போது கனிம வளத்துறை அதிகாரிகள் லாரியை பிடித்து சோதனை நடத்தி, 'ரூ.50 ஆயிரம் கொடுத்தால் லாரியை விடுவிப்போம், இல்லையென்றால் அபராதம் போடுவோம்' என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பூல் பாண்டி தன்னிடம் அனைத்து ஆவணங்களும் இருக்கிறது என கூறியும் அதிகாரிகள் பணம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பூல் பாண்டியனும் அவரது உதவியாளர்களும், தனியார் குடோனின் இரும்பு கேட்டை அதிரடியாக பூட்டி அதிகாரிகளை சிறை வைத்தனர்.
இதனால் அவர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெரியசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து அதிகாரிகளை மீட்டனர். பின்னர் அவர்களை விசாரணைக்காக மேலப்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். லஞ்சம் கேட்ட அதிகாரிகளை சிறை வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications