கடனை திருப்பி தராத தோழி.. நெருக்கடியால் மனமுடைந்த வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை.. உறவினர்கள் கதறல்
ஸ்ரீரங்கம் அருகே தோழிக்கு கடன் வாங்கி கொடுத்த வியாபாரி பணத்தை திருப்பி தராததால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார்.
ஸ்ரீரங்கம்: நடனப்பள்ளி வைக்க தோழிக்கு ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்த வியாபாரி பணம் திரும்ப கிடைக்காததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவில் தெரு சங்கர்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். 35 வயதான இவருக்கு தெய்வானை என்ற மனைவியும் குணசேகரன் என்ற 9 வயது மகனும், நிஷாந்தினி என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளனர். விஸ்வநாதன் செருப்புக்கடை நடத்தி வந்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு அவர் போனை எடுக்காததால் அவரது உறவினர் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது தெய்வானையும் 2 குழந்தைகளும் விஷம் குடித்து பிணமாக கிடந்தனர். மற்றொரு அறையில் விசுவநாதன் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார்.
கதறிய உறவுகள்
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர் கூச்சலிட்டு கதறினார். இதனிடையே தகவலறிந்து விஸ்வநாதன் வீட்டுக்கு அவரது உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் வீட்டின் முன்பு நின்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
ரூ.1 கோடி வாங்கிய தோழி
அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக விஸ்வநாதன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என அவர்கள் கூறினார். கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வநாதனுக்கு திருவெறும்பூரை சேர்ந்த ஒரு பெண் அறிமுகமானார் என்றும் அவர் ஸ்ரீரங்கத்தில் வெளிநாட்டை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பரதநாட்டியம் கற்று கொடுக்க நடனப்பள்ளி ஆரம்பிக்க இருப்பதாகவும், இதற்காக ரூ.1 கோடி வரை தேவை என்றும் விஸ்வநாதனிடம் கேட்டுள்ளார்.
கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி
அவரும் வெளியே தெரிந்தவர்கள் மூலம் கடன் வாங்கி அந்த பெண்ணிடம் பணத்தை கொடுத்தார். அதன்பிறகு அந்த பெண் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து பலமுறை கேட்டும் பலனில்லாததால் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விபரீத முடிவு
ஆனால் விஸ்வநாதனிடம் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் அவர் மனமுடைந்து இந்த விபரீத முடிவை எடுத்துவிட்டார். ஆகவே இது குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வநாதனின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெண்ணிடம் விசாரணை
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், விஸ்வநாதன் பணம் கொடுத்ததாக கூறப்பட்ட அந்த பெண்ணை அழைத்து வந்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீரங்கத்தில் கடன் தொல்லையால் மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.