ராம்மோகன் ராவ் வீட்டில் வருமான வரிச் சோதனை... பின்னணியில் யார்.. முத்தரசன் கேள்வி
ராம்மோகன் ராவ் வீட்டில் வருமானவரித் சோதனை நடைபெறுவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழக தலைமைச் செயலாளரின் வீடு மற்றும் அலுவலகம், தலைமைச் செயலகத்தில் அவருடைய அறை ஆகியவற்றை வருமானவரித் துறையினர் சோதனை செய்துவருவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை வெளியிட வேண்டும் என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கோரியுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவின் அண்ணா நகரில் உள்ள வீடு, அலுவலகம், அவரது மகன் விவேக்கின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என மொத்தம் 13 இடங்களில் ஒரே நேரத்தில் இன்று காலை 6 மணி முதல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதைவிட மோசமாக, தலைமைச் செயலகத்தில் உள்ள ராம்மோகன் ராவின் அறையிலும் நுழைந்து வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். இப்படி ஒரே நாளில் நடைபெற்ற பல்வேறு சோதனையின் போது முக்கிய ஆவணங்கள், ரொக்கம் மற்றும் தங்கம் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
ஒரு மாநிலத்தில் தலைமைச் செயலாளரின் வீடு மற்றும் அலுவலகத்தை வருமானவரித் துறையினர் சோதனை செய்வதை விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வருமானவரித் துறையின் சோதனையை கடுமையாக விமர்சித்துள்ளார். தலைமைச் செயலாளர் வீட்டில் நடக்கும் சோதனை என்பது அரசாங்கத்தை சோதிப்பதற்கு சமம் என்று கூறிய முத்தரசன், சோதனை நடவடிக்கைக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சோதனையில் கைப்பற்றப்பட்டவை என்ன? என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் முத்தரசன் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications