கோவையில் தங்க நகை வியாபாரி வீடு, கடைகளில் ஐடி ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் சிக்கின!
கோவையில் பிரபல தங்க நகை வியாபாரி அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதிர்ல முக்கிய ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை : கோவையில் பிரபல தங்க நகை வியாபாரி அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதிர்ல முக்கிய ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கோவை ராஜா வீதி பகுதியை சேர்ந்தவர் சாஜிக் கரம் சேட். இவர் தங்க நகைகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். 500, 1000 ரூபாய் தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, இவரது வங்கி கணக்கில் 7 லட்சம் ரூபாய் பணம் வைப்பு வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் சாஜிக் கரம் சேட் முறையாக வருமான வரி செலுத்தாமல் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் 3 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சாஜிக் கரம் சேட் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனையில் நடத்தினர்.
4 மணி நேரம் நடந்த இந்த சோதனையின் போது, 7 லட்சம் ரூபாய் பணம் முதலீடு செய்யப்பட்டது குறித்தும், அவரது வியாபார பண பரிவர்த்தனை உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து சாஜிக் கரம்சேட் மற்றும் அவரது மகன் ஆர்ஜீன் ஆகியோரை விசாரணைக்காக வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர். சமீபத்தில் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி, முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், கோவையில் தங்க நகை வியாபாரியிடம் சோதனை நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.