சென்னை கோட்டை அருகே சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை!
சென்னை: நாட்டின் 70வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் இரண்டாவது நாளாக அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
நாடு முழுவதும் சுதந்திரதினம் வரும் திங்கட்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா மூவர்ண கொடியை ஏற்றி வைப்பதுடன், அணி வகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொள்ளவிருக்கிறார்.
இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி, 3 தினங்கள் நடைபெறுவழ வழக்கம். 9ம் தேதியும், 11ம் தேதியும் ஒத்திகை நடைபெற்றுள்ளது. 13ம் தேதி மீண்டும் ஒத்திகை நடைபெறும்.

சுதந்திர தின ஒத்திகை
162 காலாட்படையினர் மற்றும் 9 அதிகாரிகள், 14 குதிரைப்படையினர் இந்த ஒத்திகையில் பங்குபெற்றனர். சுதந்திர தின அணிவகுப்பு காரணமாக பாரிமுனை சுரங்கப்பாதை முதல் போர் நினைவு சின்னம் வரை சிறிது நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

போக்குவரத்து மாற்றம்
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் வரும் 15ம் தேதி சுதந்திர தினவிழா நடைபெற உள்ளதால், நாளையதினம் இறுதி மற்றும் 3வது ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை 6.30 மணி முதல் ஒத்திகை முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

போர் நினைவுச் சின்னம்
நேப்பியர் பாலத்திலிருந்து போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரம் சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

பாரிமுனை செல்வது எப்படி?
காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.

காமராஜர் சாலை
பாரிமுனையிலிருந்து, ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.

கொடிமரம் சாலை
ஈ.வெ.ரா. சாலை மற்றும் அண்ணா சாலையிலிருந்து கொடிமரம் சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.

வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு
ஈ.வெ.ரா. சாலை மற்றும் அண்ணா சாலையிலிருந்து கொடி மரம் சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, பெரியார் சிலை, அண்ணா சிலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு போக்குவரத்து போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications