அதிமுக ஆதரவு தேர்தல் ஆணையம்.. "குடிகாரக் கட்சி" குமாரசாமி தலைமையில் சுயேச்சைகள் ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழக தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாக நடப்பதாக கூறி அதைக் கண்டித்து இன்று காலை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கியப் புள்ளியாக திகழ்ந்தவர் குமாரசாமி. இவர் குடிகாரர்கள் நல கட்சியின் வேட்பாளர் ஆவார்.

திணிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் அதிமுக கிளை செயலாளர் போலவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி அதிமுக நடக்கவில்லை என ஒரு தலைபட்சமாக கூறி வரும், அதிமுக ஆதரவு தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக இவர்கள் கூறினர்.

சென்னை மாநகராட்சி 4வது மண்டல அலுவலகம் முன்பு நடந்தது இப்போராட்டம். இதில் வேட்பாளர்கள் எம்.எல்.ரவி, குடிகாரக் கட்சி குமாரசாமி, ராமச்சந்திரன், வேணுகோபால், மகாராஜன், பொன்ராஜ், துரைவேல், கோபி, ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் காவி வேட்டி அணிந்து வந்திருந்தனர். குடிகாரக் கட்சி குமாரசாமி தோளில் போட்டிருந்த துண்டின் இருபக்கமும் மது புட்டிகள் இடம் பெற்றிருந்தது பார்க்க வித்தியாசமாக இருந்தது.












Click it and Unblock the Notifications