ஜெ. வழக்கு தீர்ப்பை விமர்சனம் செய்வதை கண்டிக்க கூடாது: வக்கீல் சங்கம் வக்காலத்து
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை விமர்சனம் செய்பவர்களை மிரட்ட கூடாது என்று அகில இந்திய வக்கீல்கள் சங்க தமிழக பிரிவு கூறியுள்ளது.
இதுகுறித்து அச்சங்க பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு-பாண்டிச்சேரி பார்கவுன்சில் சேர்மன் செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு தீர்ப்பை யாரும் விமர்சனம் செய்ய கூடாது என்று விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் பாணியில் கூறியிருப்பதை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சனம் செய்யும் உரிமை ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் உள்ளது. நீதிமன்றங்களும், வழக்கறிஞர்களும் பல்வேறு காலங்களில் ஆளுகின்றவர்களாலும், அதிகார வர்க்கத்தாலும், பாதிக்கப்பட்டபோதும், இதற்கு முன்பு இதே வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்தபோதும் ஏதும் பேசாதவர்கள் தற்போது ஒரு சார்பாக பேசுவது உள்நோக்கம் கொண்டது ஆகும்.

தமிழ்நாடு பாண்டிச்சேரி கவுன்சில் தலைவர் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். தங்களது சொந்த அரசியலுக்காக பார் கவுன்சில் தலைவர் பதவியை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது ஆகும். இவ்வாறு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications