இடி மின்னலுடன் 5 நாட்களுக்கு மழை..வெப்பத்தை தணிக்கும் வருண பகவான்..ஜில்லென்று மாறிய வானிலை
சென்னை: தகிக்கும் வெப்பத்தை தணிக்க வருண பகவான் கருணையால் கோடை மழை பெய்து வருகிறது. இடி மின்னலுடன் ஏப்ரல் 30ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகாவில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. நாடு முழுவதும் வெப்ப அலை வீசக்கூடும் என கடந்த சில வாரங்களாகவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. வெப்ப அலையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது எனவும் மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு சில அறிவுறுத்தல்களை அனுப்பியிருந்தது. மக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டன.

கடந்த வாரங்களில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவானது. நாட்டின் தலைநகரமான டெல்லியில் அதிக அளவில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் நிபுணர்கள் எச்சரித்தனர்.
இந்த நிலையில் பல மாநிலங்களில் கோடை மழை பெய்து மக்களின் மனங்களை குளிர்வித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஞாயிறு முதலே தென் மாவட்டங்களில் கோடை மழை இடி மின்னலுடன் பெய்து வருகிறது. மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்றும் வீசி வருகிறது.
இந்த நிலையில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாட்டின் கிழக்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், விதர்பா, சட்டீஸ்கர்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, உள் கர்நாடகா பகுதிகள், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஏப்ரல் 30ஆம் தேதி வரைக்கும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகாவிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதே போல அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களில் ஏப்ரல் 28 முதல் 30 வரையிலும் மணிப்பூர்,மிசோராம், திரிபுரா மாநிலங்களில் ஏப்ரல் 29,30 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திர காலத்தில் கோடை மழை பெய்தால் வெப்பத்தின் தாக்கத்தை பெரிய அளவில் உணர முடியாது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. இதனால் பெரிய அளவில் கத்திரி வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இந்த ஆண்டு பருவமழை இயல்பான அளவு பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பருவமழை மே மாதத்தின் மத்தியில் தொடங்குமா? அல்லது ஜூன் மாதத்தில் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications