மக்கள் பிரச்சனையை பேசினால் குடித்துவிட்டு பேசுகிறேன் என்கிறார்கள்: விஜயகாந்த் ஆதங்கம்

பக்ரீத் பண்டிகையையொட்டி தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று குர்பானி கொடுக்கும் விழா நடந்தது. விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு 1,000 பேருக்கு குர்பானி வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,
மனிதனுக்கு கோபம் வருவது இயற்கை. கோபம் வந்தால் பேசக் கூடாதா? மக்கள் பிரச்சனையை அவர்களுக்காக பேசக் கூடாதா?. நான் அப்படி பேசினால் விஜயகாந்த் குடித்துவிட்டு பேசுகிறார் என்கின்றனர்.
ஒரு சில அரசியல்வாதிகள் சாதி, மதங்களை கையில் வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். எம்மதமும் சம்மதம் என்பது எனது கொள்கை. பொங்கல், ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளுக்கு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டிருக்கிறேன்.
சென்னையில் வழியெங்கும் குப்பையாகக் கிடக்கிறது. ஆனால் மேயர் சைதை துரைசாமியோ போர்க்கால நடவடிக்கையில் குப்பைகள் அகற்றப்படுவதாக கூறுகிறார். என் அலுவலகத்திற்கு அருகில் கூட மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது.
இது போன்ற பிரச்சனைகள் குறித்து மக்கள் அப்பகுதி கவுன்சிலரிடம் தெரிவித்தால் எம்.எல்.ஏ.வை பார்க்கச் சொல்கிறார்கள். எம்.எல்.ஏ.வை பார்த்தால் கவுன்சிலரை பாருங்கள் என்கிறார்கள். இப்படி தான் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் தமிழக மக்களை மாறிமாறி ஏமாற்றி வருகின்றன. அதிமுகவுக்கு 27 சதவீத வாக்குகள் இருப்பதாகவும் 7 சதவீத வாக்குகள் முதல்வர் ஜெயலலிதா வந்த பிறகு அதிகரித்ததாகவும் கூறுகின்றனர். 3 முறை முதல்வராக உள்ளவரால் 7 சதவீதம் வரைதான் வாக்குகளை உயர்த்த முடிந்ததா? ஆட்சியைக் கைப்பற்றாமலே தேமுதிகவுக்கு 10 சதவீத வாக்குகள் உள்ளன. அப்படி என்றால் தேமுதிகதானே பெரிய கட்சி.
தேமுதிகவும் ஒரு நாள் ஆட்சிக்கு வரும். ஏற்றத்தாழ்வற்ற சமநிலை சமுதாயத்தை ஏற்படுத்துவோம்.
இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். ஆனால் இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி விஜயகாந்த் போன்று யாரும் குரல் கொடுத்திருக்க முடியாது.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டின் மூலம் போர்க்குற்றவாளியான ராஜபக்சே காமன்வெல்த் அமைப்பின் தலைவராகும் சூழல் உருவாகும். அதன் மூலம் ராஜபக்சே தனது மீதுள்ள களங்கத்தை நற்பெயராக மாற்றக்கூடும். அதனால் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications