கடல்சார் வல்லுனர்கள் அதிக அளவில் உருவாக்கப்பட வேண்டும்: பிரணாப் வலியுறுத்தல்
சென்னை: இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கடல்சார் வல்லுனர்கள் அதிக அளவில் உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்..
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்ற மாணவி ஷாலினி ஜெயந்தி, மாணவர் ராதாகிருஷ்ணன் உள்பட சிலருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். இந்த பல்கலைக்கழகத்தின் கல்வி வளாகங்களில் படித்த 1,339 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக துணைவேந்தர் கே.அசோக்வர்தன் ஷெட்டி வரவேற்புரையோடு தொடக்கிய விழாவில், கவர்னர் ரோசய்யா, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், பல்கலைக்கழக வேந்தர் வி.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-
நீண்ட வரலாறு...
இந்தியாவுக்கு கடல்சார் வணிகத்தில் நீண்ட வரலாறு உண்டு. இந்திய கடல்சார் வலிமை, 13-ம் நூற்றாண்டில் இருந்து குறையத் தொடங்கியது. அப்போதுதான், மேற்கத்திய நாடுகளின் சக்தி உயரத் தொடங்கியது.
எண்ணிக்கை உயர்ந்தது....
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மும்பை மற்றும் கொல்கத்தாவில் கடல்சார் பொறியியல் பயிற்சி இயக்குனரகத்தின் கீழ் தலா ஒரு கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் மிகச்சிறந்த கடல்சார் தொழில் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.
அங்கீகாரம்...
இவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தொழில் திறமை போன்றவற்றால் உலக அளவில் கடல் சார் பணிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றனர்.
மாலுமிகளின் எண்ணிக்கை....
உலகின் வியாபாரப் பொருட்களில் 95 சதவீதம் கடல் மார்க்கமாகத்தான் நடக்கிறது. இதில் 10 சதவீதம் தான் இந்திய கப்பல்கள் மூலம் நடைபெறுகிறது. உலகளவில் ஒப்பிடும்போது இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை 6 சதவீதம்தான். இந்திய கப்பல்கள் குறைந்த அளவில் சரக்குகளை கொண்டு செல்கின்றன.
கடல்சார் வல்லுனர்கள்....
பொருளாதாரத்தில் இந்தியா பரிணமிக்க வேண்டுமென்றால், தரமான கடல்சார் வல்லுனர்களின் எண்ணிக்கையும், கப்பல் கட்டும் திறனும் வளர்ந்தாக வேண்டும். கப்பல் கட்டும் தொழிலால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும். கப்பல் தொழிற்சாலைகளை வளர்ப்பதில் மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்...
இந்தியாவின் ‘கடல்சார் கொள்கை 2020'ல், 2015-ம் ஆண்டுக்குள் இந்திய மாலுமிகளின் எண்ணிக்கையை 9 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டு இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் தொடங்குவதற்காக அங்கீகாரம் அளித்த அமைச்சரவையில் நானும் இடம்பெற்றிருந்தேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பெண்களும் வரவேண்டும்...
கடல்சார் தொழிலின் அனைத்துப் பிரிவிலும், சர்வதேச அளவிலான பயிற்சிகளை மாணவர்களுக்கு இந்த பல்கலைக்கழகம் அளிக்க வேண்டும். அதோடு கடல்சார் தொழில்களில் பெண்கள் அதிகம் இடம்பெற வேண்டும். பல சங்கடங்களைக் கடந்து இந்த பல்கலைக்கழகம் எழுந்துள்ளது என்பதை அறிவேன். சில துறைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
நன்றிக்கடன்...
இந்தியாவில் 735 பல்கலைக்கழகங்கள், 37 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. ஆனால் மேற்கல்வி பெறும் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது. நீங்கள் இங்கு கல்வி பயில்வதற்கு நமது சமுதாயம் உதவியது. எனவே நீங்களும் இந்த சமுதாயத்துக்கு உதவ வேண்டும்' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.
அறிவாற்றல் விரிவு வேண்டும்...
விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசும்போது, ‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் துறைகளில் கப்பல்துறை மிக முக்கியமானது. உலக அளவில் நமது மாலுமிகள், நன்றாக பயிற்சி பெற்றவர்களாக திகழ்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நமது கல்வி முறை, தொழிற்சால் அறிவாற்றலை விரிவுபடுத்தியாக வேண்டும். இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் புதிய கல்வி வளாகங்களை கர்நாடகா, ஒடிசா, கோவா ஆகிய மாநிலங்களில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.