8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது… ரணில் பதவியேற்ற அடுத்த நாளே இலங்கை அட்டகாசம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இலங்கையில் 51 நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்து அந்நாட்டின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற 24 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 8 பேரை சிங்கள கடற்படை சிறைப்பிடித்துச் சென்றுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை, அவர்கள் வைத்திருந்த படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மீனவர்கள் சிறைபிடிப்பு கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில், இலங்கை கடற்படையினர் மீண்டும் தங்கள் அட்டூழியத்தை தொடர்ந்திருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
மத்திய, மாநில அரசுகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முன் வர வேண்டும் என்று கடலோர பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.