'போலீஸ்' பக்ருதீன் கைது நடவடிக்கையில் விதிமீறல் இல்லை- தேசிய லீக் மனு தள்ளுபடி

முன்னதாக அப்துல் ரகீம் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 5-ந்தேதி சென்னையில் என் நண்பர் போலீஸ் பக்ருதீனை விசாரணைக்காக போலீசார் பிடித்து சென்றனர். இதுவரை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை. எனவே அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் பக்ருதீனை கைது செய்து இருப்பதாகவும், அவரை விரைவில் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் அட்வேகட் ஜெனரல் சோமையாஜு கூறியிருந்தார்.
இதையடுத்து அப்துல் ரகீம் தரப்பில் கூடுதலாக ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், போலீஸ் பக்ருதீனை திருவண்ணாமலை இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை கைது செய்துள்ளதாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பக்ருதீனை இன்ஸ்பெக்டர் லட்சுமணன் கைது செய்ததாகவும் அவருக்கு பதவி உயர்வு மற்றும் ரொக்கப் பரிசு வழங்குவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பக்ருதீன் கைது விவகாரத்தில் போலீசார் முன்னுக்கு பின் முரணாக செயல்பட்டு உள்ளனர். சுப்ரீம் கோர்ட் விதிமுறைக்கு எதிராகவும் செயல்பட்டு உள்ளனர். எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்ருதீனை கைது செய்யப்பட்டதை சட்ட விரோதம் என்று அறிவித்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பக்ருதீன் கைது செய்த நடவடிக்கையில் சுப்ரீம் கோர்ட் விதிமுறையை போலீசார் முறையாக பின்பற்றி உள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள், எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் பிறப்பித்த தீ்ர்ப்பில், போலீஸ் பக்ருதீன் கைது நடவடிக்கையில் விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை. எனவே அப்துல் ரகீம் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டனர்.
என்ன நடந்தது...?
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் சென்னையில் வைத்து பிடிபட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. மேலும அவரது கூட்டாளிகளான பிலால் மாலிக் உள்ளிட்ட இருவர் ஆந்திர மாநிலத்தில் வைத்து போலீஸ் என்கவுண்டருக்குப் பின்னர் பிடிபட்டனர்.
இவர்களைப் பிடித்த போலீஸாருக்கு தமிழக அரசு பதவி உயர்வும், பரிசையும் அளித்தது. இந்த நிலையில் பக்ருதீன் பிடிபட்டது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் சந்தேகங்களைக் கிளப்பியிருந்தனர். இந்த நிலையில்தான் தேசிய லீக் செயலாளர் அப்துல் ரகீம் கோர்ட்டை அணுகியிருந்தார்.












Click it and Unblock the Notifications