நெல்லை அறிவியல் மையத்தில் புதிய அரங்கு... விஞ்ஞானிகளை ஊருவாக்க விரைவில் திறப்பு
நெல்லை: நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்கள் தாங்களே ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் புதிய அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் அறிவியல் தொடர்பான மாதிரிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை மாணவர்களே இயக்கி பார்த்து அறிவியல் ரகசியத்தை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 3டி அரங்கு, டைனோசர் பூங்கா உள்ளிட்டவை அதிகளவில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் தினமும் அறிவியல் மையத்தை பார்வையிட்டுச் செல்கின்றனர். கோடை காலங்களில் அதிக அளவில் இங்கு மக்கள் கூடுகின்றனர். மக்களுக்கு பொழுது போக்கு மையமாகவும் இந்த அறிவியல் பூங்கா இருந்து வருகிறது. இந்த அறிவியல் மையத்தில் புதுவரவாக 'இன்னோவேஷன் ஹப்' எனப்படும் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் அரங்கு விரைவில் திறக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.3 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு கட்டடம் மற்றும் ரூ.2 கோடி மதிப்பில் உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
இந்த கட்டட பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. குளிரூட்டப்பட்ட உள் அரங்கில் இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி, தாவரவியல், உயிரியல் போன்ற பல்வேறு துறைகள் குறித்த ஆராய்ச்சிகளை மாணவர்களே மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு உதவு்ம் புதிய மென்பொருளுடன் கூடிய கணினி மற்றும் இணைய தள வசதிகள் செய்யப்படுகிறது.
மென்பொருளில் ஆராய்ச்சி தொடர்பான மாதிரிகள் மற்றும் ஆலோசனைகள் இடம் பெற்றிருக்கும். இதனை சம்பந்தப்பட்ட மாணவர்களே இயக்கி பார்த்து தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications