சசிகலா விவகாரத்தில் விசாரணைக் கமிஷன் மூலம் உண்மை வெளிவரும் - தொல். திருமாவளவன் நம்பிக்கை
சசிகலா சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில் விசாரணைக் கமிஷன் மூலம் உண்மை வெளிவரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரை: சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன என்கிற விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா நியமித்துள்ள விசாரணை கமிஷன் உண்மையைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அங்கு மாடுலர் கிச்சன் உள்ளிட்ட சொகுசு வசதிகளைப் பெற்றதாக கர்நாடக டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். இது அங்கு அரசியல்மட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. அதனையடுத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா விசாரணைக் கமிஷன் அமைத்தார்.
இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியபோது,'சிறையில் சசிகலா, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வசதிகள் பெற்றார் என்ற புகார் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா அமைத்துள்ள விசாரணைக் கமிஷன் உண்மையை வெளியே கொண்டு வரும் என நம்புகிறேன்' என கூறினார்.