பெரியகுளம்: காதல் விவகாரத்தால் குடிசைகள் எரிப்பு… பதற்றம்
தேனி: கலப்பு திருமணம் செய்து கொண்டதால் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் கிராமத்தில் தலித் சமூகத்தினரில் குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் நேற்றிரவு ஏழு மணியளவில் நடந்த சாதி கலவரத்தில் தாழ்த்தபட்ட வகுப்பை சேர்ந்த அருந்தியர் மக்கள் குடி இருக்கும் குடியிருப்புகளை சாதி இந்துக்கள் ஒன்றாக சேர்ந்து தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.
இங்கு பதற்றம் நிலவி வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இது பற்றி தேனி மாவட்ட எஸ்பி மகேஷ் கூறியதாவது:
"மேல்மங்கலம் பாலுச்சாமி என்பவது மகன் சுரேஷ் பிளஸ் டூ வரை படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த செல்வன் என்பவரது மகள் முத்துலட்சுமி என்பரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் இருவர் வீட்டுக்கும் தெரியவர, எதிர்ப்பை தாண்டி உயிருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிய வந்ததும் பதிவு திருமணம் செய்துகொண்டு இருவரும் உயிருக்கு பயந்து கேரளாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த பத்து நாட்களாக சுரேஷ் வீட்டில் சென்று முத்துலட்சுமியின் உறவினர்கள் மற்றும் அவர்களது சாதியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அவர்களது பிள்ளையை ஒப்படைக்க சொல்லி மிரட்டி உள்ளனர். ஆனால் காதலர்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது என்ற பதிலை சொன்னதும் நேற்றிரவு சுமார் ஏழு மணியளவில் சுரேஷின் சமூகத்தை சேர்ந்த முருகானந்தம் என்கிற நபர் தெரு முக்கில் நின்று கொண்டு அவதூறாக நடந்துள்ளார்.
இதனால் ஆத்திரப்பட்ட முக்குலத்தோர் சமூகமக்கள் ஒன்று இணைந்து தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். அரசு கட்டிகொடுத்த கான்கிரீட் வீடுகள், குடிசைகள் என்று 11க்கும் மேற்பட்ட இடங்களில் தீவைத்து கொளுத்தி உள்ளனர். உடனடியாக காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை தேடிக்கொண்டு இருக்கிறோம். ஒருசிலர் பிடிபட்டு உள்ளனர்" என்றார்.
தர்மபுரி சம்பவம் போல
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த மாதையன் என்பவர் கூறுகையில், "தர்மபுரி இளவசரன் - திவ்யா காதல் போல இங்கேயும் நடந்து போச்சு. அதுக்காக எல்லோரும் சேர்ந்து கொண்டு, சம்பந்தம் இல்லாத எங்கள் சமுதாய குடியிருப்புகளை தீ வைத்து கொளுத்தி எங்களையும் அடித்து ஊரை விட்டே விரட்டினார்கள். நாங்கள் பிள்ளை குட்டிகளோடு உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டோம்.
குடிசைகளுக்கு தீவைப்பு
நாலா புறமும் சூழ்ந்துகொண்டு தாக்கினார்கள். மொத்தமாக வந்தவர்கள் கூடி பேசி அடித்து கோயில்கள், வீடுகள், பீரோ, சைக்கிள், மோட்டார் பைக், துணிமணிகள், கையிருப்பு பணம், நகை என்று சேர்த்து வைத்து இருந்த ஒட்டு மொத்த உழைப்பையும் தீயில் போட்டு எரித்துவிட்டனர். இனி நாங்கள் மறுபடியும் எப்படி மேலே வரபோகிறோம் என்று தெரியவில்லை என்று வேதனையுடன் கூறினார்.
கலப்பு திருமணத்தால் தலித் மக்களின் குடிசைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications