தந்தை மரணம்.. கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு மட்டும் இடைக்கால ஜாமீன்
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமனுக்கு அவரது தந்தை தங்கவேலின் இறுதி சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சை: கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜெயராமனின் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அவருக்கு இடைக்கால ஜாமீனை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கதிராமங்கலத்தில் கடந்த 30ம்தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால், பதற்றமடைந்த கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று
போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களுக்கு வரும் 28-ஆம் தேதி வரை போலீஸ் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து கதிராமங்கலம் மக்கள் போராடி வந்தனர். தற்போது ஜெயராமனின் தந்தை தங்கவேலு நேற்று மயிலாடுதுறையில் காலமானார். இதனால் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இன்று மனுதாக்கல் செய்தனர்.
அதை அவசர வழக்காக நீதிபதி நிஷா பானு விசாரணை நடத்தினார். அப்போது ஜெயராமனுக்கு வரும் 26-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications