தமிழக உள்மாவட்டங்களில் இன்று மழை அடிச்சு பெய்யுமாம்.. சென்னை வானிலை மையம் வார்னிங்!
தமிழக உள்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழக உள்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இம்மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகமாக உள்ளது.
சென்னை, கரூர், நெல்லை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் நேற்று வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சம் பாளையங்கோட்டையில் 102 டிகிரியும், திருச்சி மற்றும் வேலூரில் 100 டிகிரியும் வெயில் நேற்று பதிவானது.
வங்கக்கடலில் மாற்றம்
அதே நேரத்தில் வங்க கடலில் நிலவி வரும் திடீர் மாற்றங்களால் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்கிறது. அதாவது, வடதமிழகத்தில் கடந்த வாரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.
பல இடங்களில் மழை
அதேபோல், வெப்பசலனம் காரணமாகவும் சென்னை உள்பட பல இடங்களில் மழை பெய்தது. வானமும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
குறைந்த காற்றழுத்தம்
இந்த நிலையில், தெற்கு உள் கர்நாடகாவில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும், உள் கர்நாடகா பகுதிகளில் இருந்து குமரிக்கடல் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.