விஜயபாஸ்கர் கூட்டாளி சுப்பிரமணியன் மர்ம மரணம்... விசாரணை அதிகாரியாக சத்தியமூர்த்தி நியமனம்
நாமக்கல்லைச் சேர்ந்த காண்ட்ராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடி சார்பில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டார்.
சென்னை: தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரின் கூட்டாளியான நாமக்கல்லைச் சேர்ந்த காண்ட்ராக்டர் சுப்பிரமணியன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடி சார்பில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், அவரது நண்பர் நாமக்கல்லை சேர்ந்த சுப்பிரமணியன் வீட்டிலும் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சோதனை நடத்தப்பட்டவர்களின் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அனைவரும் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்தனர்.

அமைச்சரின் நண்பர்
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான சுப்பிரமணியன் அமைச்சரின் மூலம் அரசு ஒப்பந்தங்களை பெற்ற செய்து வந்தார். மேலும் அமைச்சரது நிறுவனங்களின் பின்புலத்தில் இருந்து சுப்பிரமணியன் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திடீர் தற்கொலை
கடந்த 8-ஆம் தேதி மோகனூரில் உள்ள பண்ணை வீட்டில் சுப்பிரமணியன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. முதலில் இவரது இறப்பு தற்கொலை என சொல்லப்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

குடலில் விஷம்
பரிசோதனை அறிக்கையில் சுப்பிரமணியனின் குடலில் விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உறவினர்களும், அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே கடந்த 6-ஆம் தேதி அதாவது சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொள்வதற்கு 2 நாள்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது.

தற்கொலை முடிவு
அதில் தொழில் போட்டி காரணமாகவும், வருமான வரித்துறை விசாரணை அதிகாரியின் மிரட்டல் காரணமாகவும் தான் உயிரை மாய்த்து கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சுமார் 4 பக்கங்கள் கொண்ட கடிதமானது காவல்துறை, முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்டவைகளுக்கு நகல் எடுத்து அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரி நியமனம்
இந்த வழக்கில் பல்வேறு மர்மங்கள் உள்ளதால் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு பல்வேறு உண்மைகள் வெளிவரும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications