டாஸ்மாக்கை எதிர்த்து விடிய விடிய கஞ்சி காய்ச்சும் போராட்டம்.. கன்னியாகுமரி அருகே பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் கோணத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி: இரணியல் கோணத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.
இரணியல் கோணம், கண்ணாட்டுவிளை போன்ற பகுதிகளை சேர்ந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் அந்தப் பகுதியில் நடத்தப்படும் டாஸ்மாக் கடை முன்பு குவிந்தனர். அவர்கள் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் இரவு 10 மணி வரை நடந்தது. மேலும், கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாக சென்று சிலரை கைது செய்தனர்.
இதில், இரணியல் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன், அருள்ராஜ் மற்றும் 5 பெண்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்தநிலையில் இந்த செய்தியை கேட்டு இரணியல்கோணம் சந்திப்பில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர்.
போலீசார் கைது செய்த தங்கள் பகுதி மக்களை விடுவிக்க கோரியும், டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், இரணியல்-தக்கலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கின.
இதையடுத்து குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இன்று அதிகாலை வரை போராட்டம் நீடித்தது.












Click it and Unblock the Notifications