ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகலையா?... இனி விமானத்தில் பறக்கலாம்.. எப்படி?
சென்னை: ரயிலுக்கு டிக்கெட் முன் பதிவு செய்துவிட்டு டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் இனி கவலைப்படவேண்டாம். டிக்கெட் கிடைக்காத பயணிகள் இனி விமானத்தில் பறக்கலாம் என ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. இதற்காக கோ ஏர், ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுடன் (ஐஆர்சிடிசி) ஒப்பந்தம் செய்துள்ளது.
ரயிலில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்தும் டிக்கெட் பெற முடியாதவர்களுக்காக ரயில்வே விமான பயண வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஸ்பைஸ்ஜெட், கோ ஏர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2ம் வகுப்பு முதல் ஏ.சி வகுப்பு வரை காத்திருப்போர் பட்டியலில் இருந்தும் டிக்கெட் பெறமுடியாத பயணிகள், சந்தை விலையிலிருந்து 30 முதல் 40 சதவீத சலுகைக் கட்டணத்தில் ஸ்பைஸ்ஜெட், கோ ஏர் நிறுவனங்களின் விமானத்தில் பயணிக்கலாம்.
சலுகைக்கட்டணத்தில்
ரயிலில் பயணிப்பவர்களில் பெரும்பாலானோர் விமானத்தைத் தவிர்ப்பதற்கு முக்கிய காரணமே கட்டணம்தான். ஓரளவு கட்டுப்படியாகும் வகையில் கட்டணம் இருந்தால் பலரும் விமானத்தை தேர்வு செய்வார்கள். அத்தகைய வாய்ப்பை ஸ்பைஸ்ஜெட் வழங்குகிறது.
விமான பயணம்
ஐஆர்சிடிசி-யுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதே பயணிகளுக்கு சிரமம் இல்லாத பயணத்தை அளிக்க வேண்டும் என்பதுதான். ஏற்கெனவே இதுபோன்று ரயில் பயணிகளுக்கு விமான பயண டிக்கெட்டை அளித்து வருகிறோம். இது இனி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவன உரிமையாளர் அஜய்சிங் கூறியுள்ளார்.
ரயில் பயணிகளுக்கு
ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு காத்திருப்போர் எண்ணிக்கை அதிகம். இவர்களில் சிறிதளவு கூடுதல் தொகை செலுத்தி விமான பயணத்தை தேர்வு செய்வோருக்கு அத்தகைய வசதியை ஸ்பைஸ்ஜெட் அளிக்கும். இது பயணிகளுக்கும் விமான நிறுவனத்துக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் விஷயம் என்று இந்திய சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சுபாஷ் கோயல் கூறியுள்ளார்.
காத்திருப்பு பட்டியல்
இப்புதிய திட்டத்தின்படி, பயணிகள், குறைந்த கட்டணத்தில், விமானத்தில் செல்லும் வாய்ப்பை பெறலாம். ஆனால், பயணம் செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன் வரை டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அதுவும், காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும். கடைசி நேர பயணிகள் பட்டியல் தயாரிக்கப்படும் வரை டிக்கெட் உறுதியாகாத பயணிகள், இத்திட்டத்தினால் பலனடையலாம்.
விமான வசதி
இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் இருந்து இ-மெயில் வரப்பெற்ற பயணிகள், விமான டிக்கெட்டை பதிவு செய்யலாம். இதன் பின், www.air.irctc.co.in என்னும் வலைத்தளத்தில், லாகின் செய்து, ரயில் டிக்கெட் பட்டியலில் இருந்து பயணியின் பெயரை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின், 'பிளைட் சார்ஜ்' என்பதை தேர்வு செய்ய வேண்டும். பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விமான வசதி இருந்தால்தான், இந்த திட்டத்தின் பலனை பெற முடியும்.
கட்டணம் கிடைக்காது
பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு, விமான டிக்கெட்டிற்கான முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். ரயில் டிக்கெட்டிற்கான கட்டணம், இதில் கழிக்கப்படமாட்டாது. ரயில் டிக்கெட்டிற்கான கட்டணத்தை, வழக்கமான முறையில் திரும்பப் பெறலாம். கடைசி நேர விமான டிக்கெட் முன்பதிவு என்பதால், பயணிகள் குறித்த நேரத்தில் விமான நிலையத்தை சென்றடைய வேண்டும். இல்லாவிடில், விமான டிக்கெட்டிற்கான கட்டணம் திரும்பக் கிடைக்காது.