என்னாது மத்திய அமைச்சரவையில் அதிமுக இணையப் போகிறதா...?
மத்திய அமைச்சரவையில் அதிமுக இணைவதாக வந்த பத்திரிகை செய்திகளுக்கு அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற போவதாக வந்த தகவல்களை டிடிவி தினகரன் மறுத்துள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக 37 எம்.பிக்களைப் பெற்று தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக விஸ்வரூபமெடுத்தது.
ஜெயலலிதா இருந்த வரை தேர்தல் கூட்டணிக்காக யார் வீட்டு வாசலிலும் அவர் காத்திருந்தது கிடையாது, மறைமுகமாக அழைப்பு விடுத்தது கிடையாது.

இரட்டை இலைதான்
அதிமுகவுடன் கூட்டணி வைக்க உதிரி கட்சிகள் விருப்பப்பட்டாலும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வைப்பார் ஜெயலலிதா. அதன் எதிரொலிதான் கடந்த 2016-இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்றார்.

பாஜக கட்டுப்பாட்டில்...
ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவின் ஆட்சி பாஜகவின் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்படுகிறது. இதை அதிமுக அரசு மறுத்தாலும் மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எடப்பாடியார் ஆமோதிப்பதை பார்க்கும் போது சிபிஐ ரெய்டு, வருமான வரி துறை ரெய்டுகளுக்கு அஞ்சி தங்களை பாஜகவிடம் அடகு வைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மத்திய அமைச்சரவையில்...
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையவுள்ளதாகவும், அமைச்சரவையில் இடம்பெற போவதாகவும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

யூகங்களே
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், பாஜக கூட்டணியில் அதிமுக இணையபோவதாக கூறும் தகவல்கள் உண்மையல்ல. மத்திய அமைச்சரவையில் எங்கள் கட்சி எம்பிக்கள் இடம்பெற உள்ளனர் என்ற தகவலும் யூகங்களே என்றார் தினகரன்.












Click it and Unblock the Notifications