ரவுடி பினு திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கலா? வாகன சோதனையில் போலீஸார்
ரவுடி பினு திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Recommended Video

திருவள்ளூர்: ரவுடி பினு திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த சூளைமேட்டைச் சேர்ந்தவர் பினு. கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் மீது 4-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆட் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து, போதை கடத்தல் இவற்றில் கொடி கட்டி பறந்து வருகிறார்.

இவரையும் இவரது கூட்டாளிகளையும் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் ரவுடி பினுவுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் என்பதால் பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் உள்ள லாரி ஷெட் ஒன்றில் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது பிறந்தநாள் கேக்கை ரவுடி பினு வீச்சரிவாளால் வெட்டினார். இதையடுத்து ரவுடிகள் அனைவரும் குடித்துவிட்டு கும்மாளம் போட்டனர். அப்போது ரவுடிகள் கூடுவது குறித்து முன்கூட்டியே தகவலறிந்த போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தனர்.
அப்போது பினு, கனகு, விக்கி ஆகிய 3 பேர் மட்டும் தப்பி சென்றனர். பினுவுக்கு சேலத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் அடைக்கலம் கொடுத்ததாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்றனர்.
இந்நிலையில் ரவுடி பினுவின் கூட்டாளி முகேஷ் என்பவரை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கைது செய்தனர். ஆனால் பினுவும் அவரது கூட்டாளிகளும் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸார், 3 ரவுடிகளையும் பிடிக்க தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications