இதுதான் திமுகவின் மாஸ்டர் பிளானா? கருணாஸ் அதிரடியின் பின்னணி
Recommended Video

சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக எம்எல்ஏ கருணாஸ் புரட்சி குரல் எழுப்பியதன் பின்னணியில் திமுக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் தலைவரான நடிகர் கருணாஸ்.
ஆனால் சமீப காலமாகவே, அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற பிற சிறு கட்சி பிரமுகர்களான தமிமுன் அன்சாரி, தனியரசு போலவே கருணாஸும், எடப்பாடி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்.

கைது, ஜாமீன்
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முதல்வரே நான் அடிப்பேன் என அஞ்சுகிறார் என்று கருணாஸ் பேசிய பேச்சு, அரசை உசுப்பேற்றிவிட்டது. இதையடுத்து கருணாஸ் கைது செய்யப்பட்டார். ஐபிஎல் போட்டியில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பான வழக்கும் அவர் மீது பாய்ந்தது. தற்போது கருணாஸ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

தினகரன் ஆதரவு
வெளியே வந்த கருணாசை, தினகரன் ஆதரவு எம்எல்ஏ ரத்தினசபாபதி சந்தித்து பேசினார். இதையடுத்து ரத்தினசபாபதி, கருணாஸ் உட்பட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நால்வர் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். விளக்கம் கேட்டு சபாநாயகர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தகவல்கள் கசியவிடப்பட்டன.

ஸ்டாலின் திடீர் அறிக்கை
ஆனால், இதற்கு பிறகுதான், ஆரம்பித்தது அதகளம். கருணாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தவறு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். கருணாசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படாத நிலையில், யூக செய்திகள் அடிப்படையில் முந்திக்கொண்டு ஸ்டாலின் அறிக்கை வெளியிட என்ன தேவை என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அதுவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அக்கட்சி அடிப்படை உறுப்பினரான கருணாசுக்கு, திமுக தலைவர் ஏன் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற வினா எழாமல் இல்லை.

ஜெ.அன்பழகன்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாகும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற புதிதாக நால்வரை தகுதி நீக்கம் செய்வது அரசின் திட்டம் என்பது ஸ்டாலின் குற்றச்சாட்டு. அரசு கவிழ வேண்டும் என்ற ஆர்வம் எதிர்க்கட்சி தலைவருக்கு இயல்பானது என்றபோதிலும், யூகத்தின் பேரிலேயே அறிக்கை அளிக்க அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இதைவிட உச்சகட்டமாக இன்று கருணாசை திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளார்.

ஆதரவு உள்ளது
மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லை என்று, கருணாஸ் சார்பில், சட்டசபை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒரே உறுப்பினரை கொண்ட அல்லது, ஒத்த கருத்துள்ள ஒரு சில எம்எல்ஏக்களை கொண்ட கருணாஸ் தரப்பால் எப்படி இப்படி ஒரு மனுவை அளிக்க முடிந்தது? சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய வாக்கெடுப்பு நடந்தால் அதற்கு தங்கள் ஆதரவு உண்டு என்று திமுக தரப்பு சொல்லாமல் இதை கருணாசால் செய்திருக்க முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கருணாஸ் அதிரடிகள்
மற்றொரு வழக்கில் கருணாஸ் கைது செய்யப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், திடீரென நெஞ்சு வலி என மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துகொண்டார் கருணாஸ். அரசுக்கும், சபாநாயகர் தரப்புக்கும் இப்படி அடுத்தடுத்து அதிரடிகளால் ஆட்டம் காண்பிக்கிறார் அவர். தனி நபராக இதையெல்லாம் அவர் செய்துவிட முடியாது என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.

குடியரசு தலைவர்
சில மாதங்கள் முன்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட போட்டி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற கருணாஸ், ஸ்டாலின்தான் முதல்வராக வேண்டும் என பகிரங்கமாக பேசியிருந்தார். இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், கருணாசின் சாவி இப்போது திமுகவிடம் இருப்பதாகவும், அங்கே முடுக்கப்படும் வேகத்திற்கு கருணாஸ் செயல்படுவதாகவும் கண்சிமிட்டுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தமிழகத்தில் அரசு இயந்திரம் முடங்கிவிட்டதால் குடியரசு தலைவர் இதில் தலையிட வேண்டும் என்று திடீரென ஸ்டாலின் நேற்று ட்வீட் செய்திருந்ததை வைத்து பார்க்கும்போது, எடப்பாடி அரசுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இனி வரும் நாட்களில் அரசியல் சதுரங்க காய் நகர்த்தல்களால் தமிழகத்தில் அனல் பறக்கும் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications