'ஸ்டாலினுக்குத் தெரிந்துதான் நடக்கிறதா?!'- தொண்டர்களுக்கு 'ஷாக்' கொடுக்கும் விசாரணைக் குழு
திமுக தொண்டர்களுடன் நடத்திய ஆய்வு பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டதாம், மாவட்ட செயலாளர்களின் தலையீடு இருப்பதால் ஸ்டாலினுக்கு தெரிந்துதான் நடக்கிறது என்கின்றனர்.
Recommended Video
சென்னை: தி.மு.க தொண்டர்களுடன் ஆய்வை நடத்தி முடித்த செயல் தலைவர் ஸ்டாலின், அதன் முடிவுகளை வெளியிடாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார். ' மாவட்டங்களில் பாரபட்சமான முறையில்தான் விசாரணைக் குழு ஆய்வு நடத்தியது. மாவட்ட செயலாளர்களின் தலையீடு அதிகரித்துள்ளதால் மௌனம் காக்கிறார் ஸ்டாலின்' என்கின்றனர் உடன்பிறப்புகள்.
தி.மு.கவின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து தொடர்ந்து 52 மாவட்டங்களில் உள்ள தொண்டர்களுடன் ஆய்வு மேற்கொண்டார் ஸ்டாலின். மாவட்ட செயலாளர்களின் அணுகுமுறை, மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள், மாநில நிர்வாகிகளின் அலட்சியம் என ஒவ்வொரு தொண்டர்களிடமும் விரிவாகப் பேசினார்.
'உங்களுடைய குறைகளை எல்லாம் குறைதீர்ப்புப் பெட்டியில் போடுங்கள்' எனக் கூறினார் ஸ்டாலின். அவர்களும் மாவட்டத்தில் நடக்கும் குளறுபடிகளை எழுதிப் போட்டனர்.
அணி உருவாக்கம்
இந்த மனுக்கள் எல்லாம் இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் வைக்கப்பட்டது. மாவட்ட வாரியாக இந்த மனுக்களைப் பிரித்து, பத்து புதுமுக வழக்கறிஞர்களைக் கொண்ட அணி ஒன்றை உருவாக்கினார். அவர்கள் நேரடியாக மாவட்டங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர். ஏறக்குறைய மூன்றரை மாதங்கள் கடந்துவிட்ட பின்னரும் எந்தவொரு நிர்வாகியின் மீதும் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்
" நேற்று முன்தினம் சென்னை வடக்கு மாவட்டத்தில் விசாரணை குழு ஆய்வு நடத்தியது. இந்தக் குழுவில் இருக்கும் வழக்கறிஞர் ஒருவர், இதே மாவட்டத்தின் முக்கிய பிரமுகரின் நெருங்கிய ஆதரவாளர்.
தட்டச்சு
பெயரளவுக்கு விசாரணையை முடித்துவிட்டுச் சென்றுவிட்டனர். இதைவிடக் கொடுமை, புகாரில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்ற விஷயம் சம்பந்தப்பட்ட நபர்களின் கைகளுக்கே சென்றுவிடுவதுதான். இதேபோல், விசாரிக்கச் சென்றபோது அந்த நபர், தான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை தட்டச்சு செய்து எடுத்து வந்திருந்தார்.
குலைந்து விடும்
இதை விசாரணைக் குழுவில் உள்ள சிலர் அதிர்ச்சியோடு கவனித்தனர். இதைப் பற்றித் தலைமைக்கும் புகார் அனுப்பியுள்ளனர். 'இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பு குலைந்துவிடும்' என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா எனத் தெரியவில்லை.
சோர்வான மனநிலை
'யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன், தைரியமாகப் புகார் கூறுங்கள்' என அவர்தான் நம்பிக்கையூட்டினார். தலைமையின் அமைதியைப் பார்த்து, தொண்டர்கள்தான் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் நாடாளுமன்றத் தேர்தலில் தொண்டர்கள் சோர்வான மனநிலையில்தான் வேலை பார்ப்பார்கள்" என்றனர்.