இப்போ கொடநாடு பயணம் ரொம்ப முக்கியமா?: எம்.எல்.ஏ. விஜயதரணி
சேலம்: அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில் முதல்வர் ஜெயலலிதா கொடநாடு சென்றுள்ளதால் மக்களுக்கு என்ன பயன் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்து கேட்பு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியும், எம்.எல்.ஏ.வுமான விஜயதரணி கலந்து கொண்டார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழக சட்டசபை தேர்தலில் மத சார்பின்மை மற்றும் மதுவிலக்கை ஆதரிக்கும் கட்சிகளோடு தான் காங்கிரஸ் கூட்டணி வைக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் துவக்க கல்வி முதல் ஆய்வு படிப்பு வரை இலவசம்.
அதிமுக ஆட்சியில் மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். உளுந்து, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. இந்த நேரத்தில் முதல்வர் கொடநாடு சென்றுள்ளதால் மக்களுக்கு என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.