முப்பெரும் விழாவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கெட் அவுட்டா? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்!
மதுரையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காதது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
Recommended Video
மதுரை : மதுரையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்காதது இரு அணிகளிடையே மீண்டும் பிளவை ஏற்படுத்தியுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலை சின்னம் கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாகவும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவிற்கு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் பழனிசாமிக்கு இரட்டை இலை பெற்ற வெற்றியை குறிக்கும் விதமாக வெற்றிலை மாலை போடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கொடியேற்றி வைத்தார். இந்த கொடிக்கம்பத்தில் அமைச்சர்கள் மற்றும் மதுரை மாவட்ட எம்எல்ஏக்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. கல்வெட்டின் பக்கவாட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது, இதுவும் அவசர அவசரமாக இரவோடு இரவாக சேர்க்கப்பட்டுள்ளதாக ஓ.பிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்
இரட்டை இலை சின்னத்தை பெற்ற வெற்றியை கொண்டாடும் விழாவில் துணை முதல்வர் பங்கேற்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்றால் வேறொரு நாளில் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டியத தானே.
எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு இல்லை
இன்றே நடத்த வேண்டிய கட்டாயம் என்ன, அது மட்டுமின்றி ஓ.பிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சரவணன் மற்றும் மாணிக்கம் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் ஏற்பாடா?
பொதுவாகவே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்யும் அதிமுக நிகழ்ச்சிகள் அனைத்திலுமே ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தொண்டர்களும் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மற்றொரு புறம் அதிமுகவின் ஐடி பிரிவைச் சேர்ந்தவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான ஹரிபிரபாகரன் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் புறக்கணிக்கப்படுவதாக டுவீட்டியுள்ளார்.
|
காத்துக் கொண்டிருக்கிறோம்
கழகத்தின் தலைவர் திரு ஓபிஎஸ் அவர்களை புறக்கணித்து, தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நினைவு கம்பம். இதுகூட தெரியாத முதல்வருக்கு? தெரிந்தும் தெரியாமல் இருக்கிறாரா? அதிமுக தொண்டன் என்பவன் தலைமைக்கு கட்டுப்பட்டவன், கட்ட பட்ட கைகளோடு காத்துக்கொண்டிருக்கிறோம், தலைவரின் பதிலுக்காக என்று டுவீட்டியுள்ளார்.
|
ஓ.பிஎஸ் வழிநடத்துவார்
மற்றொரு டுவீட்டில் கட்சியின் சின்னம் கழகத் தலைவர் மதுசூதனன் பெயரில் தான் உள்ளது. முதலில் தர்மயுத்தத்தை அதிமுகவிற்காக ஓ.பன்னீர்செல்வம் தான் தொடங்கினார். அவரை இரண்டாம் பட்சமாக பார்த்தால் தமிழகத்தை ஓ.பன்னீர்செல்வம் வழிநடத்துவார் என்றும் ஹரி மற்றொரு டுவீட்டில் பதிவிட்டுள்ளார்.
மீண்டும் தர்மயுத்தமா?
கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவின் இரு அணிகள் தான் இணைந்தன மனங்கள் இணையவில்லை என்று ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் சொன்னது உண்மையாகிவிடும் போல. இரட்டை இலை சின்னத்தை பெற்ற கையோடு இரண்டு அணிகளுக்கும் இடையே புகைச்சல் கிளம்பிவிட்டது. அப்ப மீண்டும் ஒரு தர்மயுத்தம் நடக்கும் போலயே ஆனால் அது ஆர்.கே நகர்தேர்தலுக்கு முன்னரா பின்னரா என்பது தான் இப்போதைய கேள்வி?