திடீர் திடீர்னு கட்சி தொடங்குறாங்க.. அணி தாவுறாங்க.. ஆஹான் இதுதான் பாஜகவின் ஆபரேஷன் திராவிடமா?
தென்மாநிலங்களை வளைக்க பாஜக ஆபரேஷன் திராவிடா என திட்டம் போட்டுள்ளதாக வெளியான செய்தியையும் தமிழக அரசியல் நிலவரத்தையும் பொருத்திப் பார்த்தால் அச்சு அசலாக ஒத்து போகிறதே.
Recommended Video
சென்னை : தென்மாநிலங்களை வளைக்க பாஜக ஆபரேஷன் திராவிடம் என்ற திட்டம் போட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியையும் தமிழகத்தில் அதிமுகவில் நடந்த களேபரங்கள், புதிய கட்சிகள் தொடக்கம் என்று நடக்கும் அக்கப்போருகளையும் பார்த்தால் தமிழகத்தில் ஏற்கனவே ஆபரேஷன் ராவணா தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.
நாடு முழுவதும் தாமரை மலர வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது பாஜக. 2014ல் பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக அதற்குப் பிறகு மாநிலங்களை குறி வைத்து தாமரையை மலர வைத்து வருகிறது. மாநிலக் கட்சிகளுடன் கூட்டு, ஆட்சியை இழந்த கட்சிக்கு ஆதரவு என்று பாஜக எப்படியோ 20 மாநிலங்களை கைப்பற்றிவிட்டது.
தமிழகத்தை ஆட்டிவைக்கம் பாஜக
தென்மாநிலத்தை குறி வைத்து காய் நகர்த்தி வரும் பாஜகவின் திட்டம் தான் ரூ. 4,800 கோடி செலவில் ஆபரேஷன் திராவிடம் என்று பகீர் கிளப்பியுள்ளார் தெலுங்கு நடிகர் சிவாஜி. ஆனால் இவர் சொல்லும் விஷயங்களும் தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பாஜக நடத்தும் அரசியல் சித்துவிளையாட்டுகளும் பொருந்திப் போகின்றன.
பலமில்லாத தேசிய கட்சிகள்
தமிழகத்தை பொருத்த வரை தேசிய கட்சி தனித்து ஆட்சி அல்லது தனிப்பெரும்பான்மை என்ற நிலை காமராஜர் ஆட்சிக்குப் பிறகு இதுவரை ஏற்படவேயில்லை. தேசிய கட்சிகள் மாநிலக் கட்சிகளான திராவிடக் கட்சிகளை சார்ந்தே இருக்கின்றன. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக கோட்டை வெலவெலத்துப் போனதற்கு முக்கிய காரணம் உள்கட்சிப் பூசல்
பாஜகவின் சதுரங்க வேட்டை
ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுக இரும்புக் கோட்டையில் சலசலப்பை ஏற்படுத்தியது பாஜக. சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுகவை விடுவித்து, எதிர் எதிர் அணிகளாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை இணைய வைத்தது என்று பாஜகவின் சதுரங்க விளையாட்டை தனக்கு சாதகமாக ஆடியது.
முளைக்கும் புதுப்புது கட்சிகள்
அதிமுகவினர் அணி தாவல்கள் சசிகலா அணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணி, பின்னர் சசிகலா அணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிச்சாமி அணி என்று மாறி மாறி ஓடி வருகின்றனர் அதிமுகவினர். மற்றொரு புறம் டிடிவி. தினகரன் புதிய கட்சி, கமல் புதிய கட்சி, ரஜினி விரைவில் புதிய கட்சி என்று வாக்காளர்களை விட கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகரிக்கும் வகையில் புதிய கட்சிகள் வரிசைகட்டுகின்றன.
கலவரத்தை தூண்டும் வகையில் மதவாதம்
அரசியல் கட்சிகளின் நிலையற்ற தன்மையால் தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக இருந்த கட்சிகளின் மீதே மக்களுக்கு நம்பிக்கையில்லாத ஒரு வெறுப்புணர்வு வந்துள்ளது. போதாக்குறைக்கு பெரியார் சிலை உடைப்பு, மத ஆலயங்கள் மீது தாக்குதல்கள் என்று மதவாத ரீதியிலான கலவரத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
ஏற்கனவே தொடங்கிடுச்சோ
ராமராஜ்ய ரத யாத்திரை என்ற ஒன்றை நடத்தி தமிழகத்தின் தென்மாவட்டத்தில் அமைதிக்கு ஊறு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் அரங்கேறியது. ஆக மொத்தத்தில் கடந்த டிசம்பர் 2016க்குப் பிறகு தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால் பாஜக திட்டம் போட்ட தமிழகத்துக்கான 'ஆபரேஷன் ராவணா' ஏற்கனவே தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகம் தான் வருகிறது.